Skip to main content

பொய் பேசும் அரசியல்வாதிக்கான நோபல் பரிசு! எடப்பாடி பழனிசாமிக்கா? மு.க.ஸ்டாலினுக்கா?

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிரச்சாரம் செய்தபோது “எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய பொய்” என்று குறிப்பிட்டு மக்களிடம் அளித்த விளக்கம் இது.   

 

palanisami

 

“அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதை கண்காணிப்பதற்காக ஒரு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, அதன் பொறுப்பு அலுவலராக (Nodal Officer) தமிழக அரசால் மருத்துவர் பாலாஜி நியமிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் ஏ.கே.போஸ் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஏ,பி படிவங்களில் மருத்துவர் பாலாஜி முன்னிலையில், ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன், நீதிமன்றத்தில் ஏ,பி படிவங்களில் ஜெயலலிதா கைரேகை பெறப்பட்டது குறித்து வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பில் ‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ நிர்வாகத்தின் மூலமாகவோ, அல்லது சிகிச்சை அளித்த மருத்துவர் மூலமாகவோ அதைப்  பெற்றிருக்கவேண்டும்’ என்ற கருத்தைத்தான் நீதிமன்ற தீர்ப்பில் நீதிபதி தெரிவித்திருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதை இட்டுக்கட்டி, பொய் பரப்பி, கண், காது, மூக்கெல்லாம் வைத்து எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசி, மக்களிடம் குழப்பத்தை விளைவிப்பதற்காக, அயோக்கியத்தனமான ஒரு வார்த்தையை பயன்படுத்திய எதிர்க்கட்சித் தலைவருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தீர்ப்பில் இப்படி சொல்லியிருக்கிறார்கள். அதை எப்படி திரித்துப் பேசுகிறார்? ஒரு அரசியல்வாதிக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சொன்னால், அதை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்றார்.  

 

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் திரித்து மு.க.ஸ்டாலின் பொய் பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைதானா? என்ற கேள்விக்கு விடை தேடினோம்.

 

jayalalitha

 

டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில் நீதியரசர் வேல்முருகன் வழங்கிய தீர்ப்பில் “ஆளுநரோ, மத்திய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ பார்க்கமுடியாத ஜெயலலிதாவை அரசு மருத்துவர் பாலாஜி சென்று பார்த்து கைரேகை வாங்கினார் என்பது நிரூபிக்கப்படவில்லை. டாக்டர் பாலாஜி உள்ளே போகும்போது, ஏ மற்றும் பி படிவங்களில் ஏற்கனவே கைரேகை வைக்கப்பட்டிருந்ததாகவும், மற்ற படிவங்கள் என்ன ஆனது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறுகிறார். ஆகவே, ஜெயலலிதா சுய நினைவோடு, யோசிக்கும் திறனோடு, நல்ல மனநிலையில்தான் இருந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால், அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு டிரக்யாஸ்டமி எனப்படும் தொண்டைக்குழாய் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது தெளிவாகிறது. எனவே, ஏ மற்றும் பி படிவங்களில் ஜெயலலிதாவுடைய கைரேகை மிகவும் சந்தேகத்துக்குள்ளானதாக இருப்பதால், அந்தப் படிவத்தை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். வேட்புமனுவில் கையெழுத்துதான் பெறப்பட வேண்டும் என்று சட்டம் கூறும்போது, அதில் கைரேகை இடலாமென்று தேர்தல் ஆணையம் சட்டத்தைத் திருத்தி கடிதம் மூலமாக ஒப்புதல் அளித்தது சட்ட விரோதமானது. எனவே, மிகுந்த குறைபாடுடைய இந்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அதனால், ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது” என்று தீர்ப்பளித்துள்ளார். 
 

மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி  தெரிவித்த கருத்தையும், ஜெயலலிதா கைரேகை வழக்கில் சென்னை  உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், இக்கட்டுரை வாயிலாக அறிந்ததும் ‘பொய் பேசுவதற்கான நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியானவர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா?’ என்பது தானாகத் தெரிந்துவிடும். 
 

-ராம்கி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்