“Who will take back our rights” - Governor Tamilisai Soundararajan

Advertisment

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரம்மாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்நிலையில், இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன. 21) நடக்கிறது. திமுகவின் எழுச்சிப் படையாகக் கருதப்படும் இளைஞரணிக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் மாநாடு என்பதால் திமுகவினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், "இளைஞரணி மாநாடாம்.. பிரம்மாண்ட முன்னேற்பாடாம்.. முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்.. தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு.. அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் மக்களைக் காக்க முன்னேற்பாடு செய்ய செல்வதற்கு தனி விமானம் கிடைக்கவில்லையா? என்று எங்கோ கேட்கிறது ஒரு குரல்..

இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர்.. இதயத்தோடு தத்தளித்தவர்களை காக்க முந்திச் செல்லவில்லையே ஏன்? என்று கேட்கிறது அதே குரல்..

Advertisment

இது ஆள்பவர்களுக்கு தகுதியா என்று கேட்டால்? ஆளுநர்களுக்கு தகுதி இல்லை என்பார்கள்.. ஆனால் ஜனநாயகத்தில் ஆளாளுக்கும் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது அதே குரல்..

உரிமை மீட்பு மாநாடாம்? காவிரி உரிமையை தொலைத்தது யார்? கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்? கல்வி உரிமையை பறிகொடுத்தது யார்? நீட் தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில்? உரிமைகளைத் தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்.. வாரிசுகளுக்கே அரியணையா? இவர்களிடமிருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார்?” என்று பதிவிட்டுள்ளார்.