Skip to main content

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? வாரிசா, துணிவா? - பொங்கல் ரிலீஸ் குறித்து குஷ்பு

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

Who will be the next superstar? varisu? thunivu? - Khushboo on Pongal release

 

கோவை வெள்ளலூரில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நடிகை மற்றும் பாஜக தேசிய செயலாளர் குஷ்பு கலந்து கொண்டார். அப்பகுதி மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.

 

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “பிரதமர் மோடி தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரத்திற்காக எவ்வளவு பாடுபடுகிறார் என்று பார்க்கிறோம். ஒவ்வொரு மேடையிலும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், இவர்கள் தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயும் ஒரு கரும்பு மட்டுமே கொடுக்கின்றார்கள். இதற்கு கொடுக்காமலேயே இருக்கலாம். சுயமரியாதை என்று சொல்லக்கூடிய திமுக ஆட்சியில் இருக்கும்போது சுயமரியாதையோடு வாழும் ஒவ்வொரு தமிழர்களும் இதைக் கண்டிப்பாக வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள்.

 

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருவர் சொல்கிறார். ஆனாலும் பாஜகவில் இருந்து பெண்கள் யாரும் வெளியே போகவில்லையே. நான் பாஜகவில் தான் இருக்கிறேன். திமுக பேச்சாளர் ஒருவர் பெண்களைப் பற்றி மிக இழிவாகப் பேசும் பொழுது இதே பாஜக சார்பாக காவல் துறையில் வழக்கு கொடுத்துவிட்டு மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். நேற்று முன் தினம் இவ்விவகாரம் என்.சி.டபுள்யூ வரை சென்று அப்பேச்சாளரை அழைத்து கையெழுத்து வாங்கி மன்னிப்புக் கடிதம் பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லை என்று சிலருக்கு அவ்வாறு தோன்றினால் அனைவருக்கும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

 

ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுக்கிறார். அது அவரது விருப்பம். ஆதரவு கொடுக்கக் கூடாது என நாங்கள் யாரும் சொல்லவில்லை. கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட கட்சி உள்ளது. அதற்கு அவர் தலைவர். அவர் ஆதரவு கொடுக்கின்றார்.

 

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தானா  எனக் கேட்கின்றனர். இது சினிமா மேடை அல்ல. அரசியலை மட்டும் பேசலாம். சினிமாவில் இருக்கும் போது சினிமாவைப் பற்றி பேசலாம். பொங்கலுக்கு வாரிசு படத்திற்கு செல்வீர்களா? துணிவு படத்திற்கு செல்வீர்களா? எனக் கேட்கின்றனர். நான் வீட்டில் இருக்க போகிறேன். முதல் நாள் முதல் காட்சிக்கு போவது பற்றி உங்களை போல் ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். நான் வீட்டில் தான் இருக்கப் போகிறேன். வாரிசு படத்தில் நடித்தது பற்றி தற்போது எதையும் சொல்ல முடியாது.

 

மும்பையில் பிறந்து அங்கே வளர்ந்தாலும் 36 வருடங்களாக தமிழகத்தில் இருக்கிறேன். என் இரு மகள்களும் இங்குதான் பிறந்துள்ளனர். நான் தமிழச்சி தான். தமிழ்நாடு, தமிழகம் என எப்படி இருந்தாலும் அது இந்தியாவின் ஒரு மிகப்பெரிய அங்கம். அதை இந்தியாவில் இருந்து பிரித்து தனியாகப் பார்க்க முடியாது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.