மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 27.11.2019 மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அந்த நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்த்த தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பட்னாவிஸுக்கு முன்பாகவே துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதனிடையே இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்ட காளிதாஸுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையோடு முதல்வருக்காக அரசு வழங்கிய வீட்டிலிருந்தும் பட்னாவிஸ் வெளியேறினார். பின்பு வெளியே வாடகைக்கு வீடு தேடி வருகிறார் என்று கூறிவருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த முதல்வர் ஒருவர் வாடகைக்கு வீடு தேடி வருவது அவரது ஆதரவாளர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் கூறிவருகின்றனர். பாஜகவில் எளிமையாக உள்ள மனிதர் என்று பிரதமர் மோடியை அக்கட்சியினர் கூறிவந்தனர். இந்த நிலையில் மோடிக்கு பிறகு பாஜகவில் எளிமையான மனிதர் என்றால் அது தேவேந்திர பட்னாவிஸ் தான் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளருக்கு தேவேந்திர பட்னாவிஸ் பொருத்தமாக இருப்பார் என்று ட்விட்டரில் மகாராஷ்டிரா பாஜகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் பாஜகவில் பிரதமர் கனவில் இருக்கும் ஒரு சில மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என்கின்றனர்.