Skip to main content

துணை சபாநாயகர் பதவியை ஏற்குமா திமுக? 

Published on 25/05/2019 | Edited on 25/05/2019

 


2019 மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் 23 பேர். மக்களவை குழு திமுக தலைவராக யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு மக்களவை திமுக குழு தலைவராகவும், கனிமொழி துணைத்தலைவராகவும், ஆ.இராசா மக்களவை திமுக கொறடாவாகவும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

kanimozhi - t.r.balu



இதற்கிடையே, மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கவிருக்கும் மோடியின் தலைமையில் புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சரவை பதவியேற்றதும் லோக்சபா சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை துவங்கவுள்ளது. பாஜகவை சேர்ந்தவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். துணை சபா பதவி எதிர்கட்சியினருக்கு வழங்கப்படுவது மரபாக இருக்கிறது. அந்த வகையில், மக்களவை துணை சபாநாயகர் பதவி எந்த கட்சிக்கு கிடைக்கும் என்கிற விவாதம் நடந்து வருகிறது. 


 

 


2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது.  துணை சபா பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக மோடி அரசு முடிவு எடுத்த போது அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. அந்த சூழலலில், 37 இடங்களை கைப்பற்றி மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவுக்கு வாய்ப்புக் கிடைக்க, அதனை ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து துணை சாபாநாயகராக  தம்பிதுரை நியமிக்கப்பட்டார். 
 

தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை பெற்றுள்ளது. முந்தைய தேர்தலைப் போல  துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் ஏற்க மறுத்தால் திமுகவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பை திமுக பயன்படுத்திக்கொள்ளுமா? என்கிற  விவாதமும் துவங்கியுள்ளது. வாய்ப்பை திமுக பயன்படுத்திக்கொள்ளும் பட்சத்தில் திமுக எம்.பி.க்களில் யார் நியமிக்கப்படலாம் என்கிற விவாதம் அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. 


நாடாளுமன்றத்தில் அனுபவம் உள்ள மூத்த உறுப்பினர்களில் ஒருவரைத் தான் துணை சபா பதவியில் அமர வைக்க கட்சி தலைமை முடிவு செய்யும். அந்த வகையில், திமுகவில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். ஆனால், அந்த பதவியில் அமர்ந்தால் கட்சி சார்ந்து பிரச்சனைகளை அணுகாமல் நடுநிலையாகத்தான் செயல்பட வேண்டும். அதுதான் மரபு. 

 

தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு திட்டங்களை கொண்டு வருகிற போதோ, மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போதோ அதனை  எதிர்த்து திமுகவின் மூத்த உறுப்பினர்கள் பேச வேண்டும். குறிப்பாக, டி.ஆர்.பாலு, ஆ.இராசா, கனிமொழி உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்து பேசக்கூடியவர்கள். அப்படிப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவரை  துணை சபாநாயகர் பதவியில் அமர வைக்க திமுக தலைமை விரும்புமா? என்றும் விவாதங்கள் நடந்து வருகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“கட்டாயப்படுத்தி, ஜூஸ் குடுத்தாங்க” - மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
mansoor ali khan issued a statement about his health conditio

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை  கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.