Skip to main content

“உதயநிதி பேசியதை நியாயப்படுத்துகிறார் முதலமைச்சர்” - வானதி சீனிவாசன்

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

"When Udhayanidhi speaks, the Chief Minister justifies" Vanathi Srinivasan

 

நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மானியக் கோரிக்கை உரையின் போது, ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கேள்விக்கு பதில் அளித்தார், “நாலு வருடங்களாக சென்னையில் போட்டி நடக்கவில்லை. ஐபிஎல்லை நடத்துவது பிசிசிஐ. அது யாரென்றால் உங்களது நெருங்கிய நண்பர் அமித்ஷா இருக்கிறார் அல்லவா, அவரது மகன் ஜெய்ஷா தான் அதற்கு தலைமை. நீங்கள் அவரிடம் பேசுங்கள். நாங்கள் சொன்னால் அவர் கேட்கமாட்டார். நீங்கள் சொன்னால் அவர் கேட்பார். நீங்கள் சொல்லி, அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 5 டிக்கெட்கள் கொடுத்தாலும் போதும். நாங்கள் பணம் கொடுத்து கூட அதை வாங்கிக் கொள்கிறோம்” எனக் கூறினார்.

 

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடிய பின் பாஜக உறுப்பினர்கள், அமைச்சர் உதயநிதி அமித்ஷா குறித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை சபாநாயகர் ஏற்காததால் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

இந்நிலையில் இன்று கோவை தெற்கு தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த வாரம் கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. 20 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வரும் சூழலில் மக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை கோவை மக்களை கடுமையாக பாதிப்பதால் இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டுள்ளேன். கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததை சபாநாயகர் ஏற்கவில்லை. மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதி அளிக்காதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. அதன் காரணமாக வெளிநடப்பு செய்துள்ளோம்.  

 

அதேபோல் உள்துறை அமைச்சரது மகன் நடத்தும் ஐபிஎல்லில் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என கிண்டலாக பேசுகிறார். சபையில் உள்துறை அமைச்சரின் மகனை தேவையில்லாமல் இழுக்கிறார்கள். இதைக் கேட்டால்... முதலமைச்சர் இதனை நியாயப்படுத்துகிறார். மகன் என்பதால் அவருக்கு மகன் செய்யும் தவறுகள் எல்லாம் தெரியவில்லை. தவறு செய்தால் கண்டிக்க வேண்டுமே தவிர நியாயப்படுத்தக்கூடாது அதன் காரணமாக வெளிநடப்பு செய்துள்ளோம்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்