Skip to main content

“அன்று திமுக செய்ததையே எடப்பாடி பதவி வெறிக்காக இன்று செய்துவிட்டார்” - டி.டி.வி. தினகரன் பேட்டி

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

"What DMK did that day, Edappadi did it for the sake of office" - TTV Dinakaran interview

 

துரோகம் செய்தவர்களுக்கு மக்களும், தொண்டர்களும் விரைவில் தீர்ப்பு தருவார்கள் என அமமுகவின் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.    

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பண திமிரால் ஜெயலலிதாவுடைய இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சில சுயநலவாதிகளால் தமிழ்நாடு பாழடைந்து விட்டது. அவர்கள் செய்த தவறுகளால்தான் தீய சக்தி திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இன்று தவறான நடவடிக்கையில் சட்டசபையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவினுடைய தொண்டர்கள் சுயநலத்தால் நடைபெறும் பதவி சண்டைகளை பார்த்து எல்லோரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அமமுக என்பதை உணருகின்ற காலம் விரைவில் வரும். துரோகிகள் பற்றி டெல்லியில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள். துரோகிகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

 

திமுக 1967 ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சராக வருவதற்கும் காரணமாக இருந்தவர் எம்ஜிஆர்தான். அவரையே கலைஞர் ஆணவப்போக்கில் கட்சியை விட்டு வெளியேற்றினார். அவர்களும் இதேபோல் பொதுக்குழு என்று 2,000 பேரை வைத்துக்கொண்டு பல லட்சம் தொண்டர்களை தாண்டி அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்கினார்கள். தனக்கு ஏற்பட்ட அநீதிக்காக, துரோகத்திற்காகத்தான் அவரை எதிர்த்து அதிமுகவை ஆரம்பித்தார் எம்ஜிஆர். அதனால் எந்த ஒரு நபரையும் குறிப்பிட்ட நபர்களின் ஆதரவு இருப்பதை வைத்துக்கொண்டு நீக்கக் கூடாது என்பதற்காகத்தான், குறிப்பாக தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் எம்ஜிஆர்.

 

ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அந்த நிலையை மாற்றி சுயநலத்திற்காக பதவி வெறிக்காகவும் செயல்பட்டுள்ளார். துரோகம் செய்தவர்களுக்கு மக்களும், தொண்டர்களும் விரைவில் தீர்ப்பு தருவார்கள்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.