Skip to main content

தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்..! ஈ.ஆர்.ஈஸ்வரன்

Published on 03/11/2020 | Edited on 03/11/2020
E.R.Eswaran

 

நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தொழிற்சாலைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி இருக்கின்ற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நீண்ட காலமாக தொழிற்சாலைகள் தரப்பிலும், தொழில் சார்ந்த பல அமைப்புகள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த ஒரு முக்கியமான தேவையை தமிழக அரசு நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

 

தொழிற்சாலைகள் 120  ஏக்கர் வரை வைத்து கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு முன் 60 ஏக்கர் வைத்து  கொள்ளலாம் என்று இருந்ததை இரண்டு மடங்கு ஏற்றி 120 ஏக்கராக மாற்றியிருப்பது தொழிற்சாலைகளின் பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

 

சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் உட்பட பல தொழிற்சாலைகள் அதிக நிலத்தை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பல தொழிற்சாலைகள் தங்களுடைய விரிவாக்கத்திற்கும், புது தொழில்களை ஆரம்பிப்பதற்கும் நிலம் கையகப்படுத்தி வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

 

தொடர்ந்து பல ஆண்டுகளாக இது எடுத்து சொல்லப்பட்டாலும் 2018 -ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் சட்டமன்றத்தில் நில சீர்திருத்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 28, 2020 முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. 

 

தொழிற்சாலைகளுடைய தேவைக்கு நிலம் தேவைப்பட்டாலும் அதை நேரடியாக தங்கள் பெயரில் வைத்து கொள்ள முடியாமல் பினாமிகள் பெயரில் வைக்க வேண்டிய தேவை இருந்து வந்தது. அதை பயன்படுத்தி கொண்டு அரசு அதிகாரிகள் தொழிற்சாலைகளை துன்புறுத்தி வந்த நிகழ்வுகளும் உண்டு. 

 

இப்போது அரசாங்கம் இதை புரிந்து கொண்டு தீர்வை கண்டதன் மூலம் தொழிற்சாலைகள் நிம்மதியாக தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும். நில சீர்திருத்த ஆணையர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான கோப்புகள் இந்த பிரச்சினைகளால் கிடப்பில் கிடந்தன. 

 

ஒற்றை உத்தரவின் மூலமாக தமிழக அரசு அத்தனை பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உண்டு. அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். புதுப்பிக்கத்தக்க இயற்கை மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்தில் அரசு கவனம் செலுத்தினாலும் இதைப்போன்ற நில சீர்திருத்த பிரச்சினைகள் தடையாக இருந்து வந்தது. 

 

இப்போது செயல்படுத்தப்பட்டு இருக்கின்ற மாற்றம் மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பயன்படும். அதன் மூலம் அந்த துறை வளர்ச்சி பெறும். தொழில் வளர்ச்சிக்காக சொல்லப்பட்ட சீர்திருத்தங்களை புரிந்து கொண்டு இந்த முடிவுகளை எடுத்து புதிய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிற தமிழக அரசின் செயல்பாட்டை வரவேற்கின்றோம்'' என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.