Skip to main content

“ஒத்தழைப்பு அளிக்க வேண்டும், இல்லையெனில் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும்” - தொல். திருமாவளவன்!

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

"We have to cooperate otherwise Tamil Nadu will become a desert" - Prof. Thirumavalavan

 

காட்டுமன்னார்கோயிலில் சட்டமன்ற அலுவலக திறப்பு விழா ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்துவைத்தனர். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், திமுகவினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “காவேரியில் மேகதாது அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது. இதற்கு மத்திய அரசு எந்த விதத்திலும் துணை போகக்கூடாது, இதுதொடர்பாக இன்று (12.07.2021) தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும். ஆகவே தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் முழு ஒத்துழைப்பு அளிக்கும். பஞ்சமி நிலத்தைக் கண்டறிவதற்கும், பின்னடைவு காலியிடங்களை உடனே நிரப்புவதற்கும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறைப்படி நடைமுறைப்படுத்துவதற்கும், தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அறிவுரை வழங்கியிருக்கிறார். உரிய வழிகாட்டுதலைத் தந்திருக்கிறார். அது வரவேற்கதக்கது.

 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் கூறுபோடும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், தமிழகத்தைப் பிரித்து தனி மாநிலமாக்க திட்டமிட்டு வதந்தி பரப்பபடுகிறது. மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலமாக அறிவிக்கப்போவதாக சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்த பிற்போக்குவாத சக்திகள் வதந்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இது மொழி மற்றும் இன அடிப்படையில் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டுவிடக் கூடாது என்பதற்கான ஒரு ஆபத்தான முயற்சி. மேற்கு மாவட்ட மக்களை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் இருந்து பிரிக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும.

 

தமிழக பாஜக தலைவர் பதவியைப் பறித்து முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி அளித்திருப்பது, பதவி உயர்வு என்ற தோற்றத்தைப் பெறலாம். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டின் பாஜக தலைவர் என்பது வலிமை வாய்ந்த பதவி, வலிமை மற்றும் பெருமையை மட்டுமே தரும். தேர்தல் முடிந்ததும் அவரை தூக்கி வீசிவிட்டார்கள். அவரும் அவர் சார்ந்த சமூகமும் வருத்தப்படக்கூடாது என்பதற்காக துணை அமைச்சர் பதவி அளித்திருப்பதாகவும், இது அவருக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம், அவமதிப்பு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட காலூன்ற முடியாது. இங்குள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து அவர்களது சதியை முறியடிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.