
மதுரை திருமங்கலம் அருகே காவல் நிலையத்தில் புகுந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி புகுந்து 'எதற்காக எங்கள் உறவினர்களை கைது செய்தீர்கள்' என ஆவேசத்துடன் காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் பால்பாண்டியை அக்கும்பல் தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. அண்மையில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பிரபாகரனின் உறவினர்களை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் கூட்டாளிகளுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை! காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வே.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்ம நபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை!
நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இதுதான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே? காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை.
வே.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு!' என தெரிவித்துள்ளார்.