Skip to main content

சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

 

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் கல்யாணி ஆகியோருக்குப் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் குருநாதன் என்கின்ற குரு. பாமகவில் தீவிரமாக செயல்பட்டார். மாநில வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். 2001ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

j.guru - ramadoss


 

மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்த ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்தை எதிர்த்து விவசாயிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதனால் இவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டன. அதேபோன்று புதிய வீராணம் திட்டத்தை எதிர்த்து போராடியது தொடர்பாகவும் பல வழக்குகள் பதியப்பட்டன முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை 5 முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
 

இந்த நிலையில் ஓராண்டுக்கு மேலாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்த காடுவெட்டி குரு, அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி உயிரிழந்த அவரது உடல் காடுவெட்டி கொண்டுவரப்பட்டு அவரது மாந்தோப்பில் அடக்கம் செய்யபட்டது. 


 

 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், குரு குடும்பத்திலுள்ள கடன்கள் அனைத்தையும் அடைக்கப்படும் என்றும் கோனேரி குப்பத்தில் உள்ள கல்லூரியில் குருவின் சிலை வைக்கபடும் என்றார். குருவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மணி மண்டபம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.
 

கிராம மக்கள் ஒன்றிணைந்து காடுவெட்டியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 50 சென்ட் நிலத்தை கட்சி தலைவர்களிடம் தானமாக வழங்கினார்கள். 
 

அதனை தொடர்ந்து கடந்த 13.12.18 அன்று காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பெயர் பலகையை திறந்து வைத்தார். சிலைத்திறப்பு முதல் மணிமண்டபம் வரை அனைத்து செலவுகளையும் சமூக முன்னேற்ற சங்கம் ஏற்று கட்டுமான பணிகளை மேற்கொண்டது.
 

மணிமண்டபம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று இன்று திறப்பு விழா நடைபெற்றது. மணிமண்டபத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.


 

 

காடுவெட்டி குரு மணிமண்டபத்தை டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்தார். பின்னர் அன்புமணி ராமதாஸ் மற்றும் குருவின் மகன் கனலரசன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

அன்புமணி பேசுகையில், மாவீரன் இருந்து இருந்தால் தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பார். இந்த மணிமண்டபம் உலக வன்னியர்களை ஒருங்கிணைப்பு செய்யும் சின்னம். மாவீரன் இருந்த காலத்தில் ராமதாஸிடம் இருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தனர். ஆனால் அவர் என்னையும் ராமதாஸையும் மரணம் மட்டுமே பிரிக்கும் என்றார். நம்மிடையே ஒற்றுமை இல்லை.
 

காலம் காலமாக எதிரிகள் நம்மை பிரித்து ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இதில் முதன்மையானது திமுக. மற்ற சமுதாயத்தில் அதன் தலைவர்களை யாரும் இழிவாக பேசுவதில்லை. ஆனால் வன்னியர்கள் மட்டுமே 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ராமதாஸை திட்டுவார்கள். 
 

j.guru - ramadoss


 

பின்னர் பேசிய ராமதாஸ், பாமக கூட்டங்களில் பேனர்கள், தட்டிகள், சுவர் விளம்பரம் செய்ய கூடாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற விளம்பர பேனர்கள் இல்லை. இதனை கடுமையாக கண்டிக்கிறேன். சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு மூலம் வழக்கு தொடரப்படும் என்றார். 
 

இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், அதிமுக சார்பில் அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.