Skip to main content

ஜெயலலிதா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது: ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிக்கை

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

ஜெயலலிதா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது என்று வேலூர் தேர்தல் முடிவு குறித்து அதிமுக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
 

eps-ops



இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 

 
வேலூர் பாராளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.வின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றன.
 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மொத்தம் 4,77,199 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றாலும் இது கழகத்தைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது.
 

வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தனித்தன்மை குறித்தும், அங்கு எத்தகைய சூழலில் வாக்குப்பதிவை அ.தி.மு.க. எதிர்கொண்டது என்பது பற்றியும், நன்கு அறிந்த அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும், வேலூர் தொகுதியில் 46.51 சதவீத வாக்குகளை கழக வேட்பாளர் பெற்றிருப்பதன் முக்கியத்துவம் தெளிவாகப் புரியும்.
 

அ.தி.மு.க.வின் தலைமையில் தேர்தல் களம் புகும் அணிதான் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய வெற்றிக்கனியை பறிக்கும் என்பதைத்தான் வேலூர் தொகுதியில் கழகம் பெற்றிருக்கும் வாக்குகள் உணர்த்துகின்றன.
 

புரட்சித்தலைவி அம்மா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதைத் தான் வேலூர் தொகுதியில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறை சாற்றுகின்றன.


 

இத்தகயை மகத்தான உண்மையை உலகுக்கு உணர்த்திட, வேலூர் பாராளுமன்றத் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல். ஏ.க்கள், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்திட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும், எல்லாவற்றுக்கும் மகுடமாய் விளங்கும் வேலூர் தொகுதியில் “இரட்டை இலை” சின்னத்திற்கு வாக்களித்த பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம், ஓங்குக புரட்சித்தலைவர் தந்த வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னம்.
 

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்