Skip to main content

நபர் ஒன்று தான் ஆனால் பட்டியல்படி 11 ஓட்டு போடலாம்... இது தான் தேர்தல் கமிஷன் லட்சணம் என பொதுமக்கள் விமர்சனம்

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

 

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் 100 சதவீதம் நடுநிலையாக, நேர்மையாக நடந்து கொள்கிறது என்று அதன் ஆணையாளர் பழனிச்சாமி பத்திரிகை பேட்டியெல்லாம் கொடுக்கிறார். ஆனால் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் இனி நடக்கப் போகிற நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் வரை எல்லாம் குளறுபடிகள் தான். 

 

Voter list



பல வருடங்களாக ஒரே முகவரியில் வசிப்பவர்களில் பல பேருக்கு இப்போதும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. ஆனால் கின்னஸ் சாதனையாக ஒரே நபருக்கு வாக்காளர் பட்டியலில் 11 ஒட்டு போட இடம் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த பெருங் கூத்து ஈரோட்டில் நடந்துள்ளது.
 

ஈரோடு மாவட்டத்தில் சென்ற டிசம்பர் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 24 ஆயிரத்து 897 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 64 ஆயிரத்து 646 பெண் வாக்காளர்களும், 79 மாற்று பாலினத்தவரும் என ஆக மொத்தம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ளதாக பட்டியல் வெளியிட்டது மாவட்ட நிர்வாகம். அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக 14 ஆயிரம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர். 


 

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு, மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 912 மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடிகளில் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் படிவம், பெயர், போட்டோ திருத்தம் செய்தல் போன்ற பல பணிகள் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பல முறை சிறப்பு முகாம் நடந்து வந்ததால், ஒரு சில வார்டுகளில் திருத்தப்படாமல் இருப்பது தொடர்ந்து வாடிக்கையாக இருந்து வருகிறது. 


 

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் பாகம் 109 ல், முனியப்பன் கோவில் வீதி, நேதாஜி நகர், விஎன்எம் சின்ன கவுண்டர் நகர் பகுதிக்கான வாக்காளர் பட்டியலில், வரிசை எண் 42 ல் இருந்து 52 வரையில், வாக்காளர் அடையாள அட்டை எண் மட்டும் மாறியுள்ளது, ஆனால் பெயர்: ரகுபதி, தந்தை பெயர் வெங்கடாங்லம், அவரது வீட்டு எண் மற்றும் வயது 56 என ஒரே படம் மற்றும் முகவரி 11 இடத்தில் இடம்பெற்றுள்ளது.
 

இது குறித்து  18வது வார்டு அரசியல் கட்சியினர் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி பாகம் 109 ல் வாக்காளர் பட்டியில் ஒரே படம், முகவரிகொண்டை 11 இடத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார். பட்டியல்படி அவர் 11 ஓட்டு போடலாம். இந்த தவறை சரி செய்யாமல் வாக்காளர் பட்டியலில் அப்படியே உள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இது தான் தேர்தல் கமிஷன் லட்சணம்" என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.