Skip to main content

“பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாவதை தடுக்க தீப்பெட்டிக்கு வாக்களியுங்கள்” - துரைவைகோ

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Vote the matchbox to prevent privatization of public sector enterprises says Durai Vaiko

ரம்ஜான் பண்டிகையையொட்டி திருச்சியில் உள்ள சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் துரைவைகோ, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் அந்த பள்ளி வளாகத்துக்கு நேரில் சென்று இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, வேட்பாளர் துரைவைகோ பேசும்போது, எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின் கருணையால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், வாழ பிரார்த்திக்கிறேன் என்று கூறிவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து, திருச்சி துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மதியம் திருச்சி பெல் குடியிருப்பு வளாகத்தில் மாலையில் திருச்சி திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம் பனையக்குறிச்சி, குவளக்குடி பகுதிகளிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் சென்று துரைவைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோவில், தேவாலயத்தில் பிரார்த்தனைக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பூரண கும்பமரியாதை கொடுத்தனர். பிரச்சாரத்தின் போது, அவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் குருக்கள் விபூதி, குங்குமம் பிரசாதமாக வழங்கினார். மேலும் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தாா். அவருக்கு தேவாலயத்தினர் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிரசாரத்தின் போது துரைவைகோ பேசும் போது கூறியதாவது:- ஒரு காலத்தில் திருச்சி பகுதி மக்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்த பெல் தொழிற்சாலை நலிவடைந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள முக்கால்வாசி பொதுத்துறை நிறுவனங்களின் நிலை இதுதான். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்க முயன்ற போது, வைகோ போராட்டம் நடத்தி அதை தடுத்து நிறுத்தினார். இதனால் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களில் விளக்கு ஏற்றியவர் வைகோ. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுக்க மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். மோடி மீண்டும் பிரதமரானால் பெல் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும். எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுக்க தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்யுங்கள் என்றார்.

பிரச்சாரத்தில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்.எல்.ஏ சேகரன், மதிமுக துணை பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா மாவட்ட மதிமுக செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.