Viral video of ADMK Shanmugakani  speech in  sattur  Local Body Election meeting

Advertisment

பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் கட்சி மாறி வாக்களித்த பிரகஸ்பதிகள் உண்டு. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு சுய ஆதாயத்துக்காக கட்சி தாவுவதெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும். இதற்கு ஒரு தீர்வுகாணவேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார், சாத்தூர் கிழக்கு அதிமுக ஒ.செ. சண்முகக்கனி. எப்படி தெரியுமா?

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம், விருதுநகர் கிழக்கு மா.செ. ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தபோது ‘மைக்’ பிடித்த ஒ.செ. சண்முகக்கனி, “அதிமுகவில் இரட்டை இலையில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். எவர் கட்சி மாறுகிறாரோ, கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு, எவரவர் கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்கிறேன்.

இந்தப் பேச்சால், என் மேல் கேஸ் கொடுத்தாலும் பிரச்சனை இல்லை. ஏனென்றால், போன உள்ளாட்சி தேர்தலின்போது, என்மேல் உள்ள கேஸ், தேர்தலையே பார்க்கவிடல. அது ஒன்னும் பிரச்சனை இல்ல. கட்சி மாறுவது தெரிந்தால், இரட்டை இலையில் ஜெயிச்சுட்டு கட்சி மாறி போனால், உங்க ஆத்தாகிட்ட வாய்க்கரிசி வாங்கிட்டு போங்க” என வகைதொகையில்லாமல் பேசிவிட்டும், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் சிலரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டும் ஓய்ந்தார். (ஒ.செ. சண்முகக்கனி, இந்தக் கூட்டத்தில் ஒருமையில் பேசினார். நாகரிகம் கருதி நாம் அதனை திருத்தியிருக்கிறோம்).

Advertisment

சண்முகக்கனியின் இந்த மிரட்டல் பேச்சு, விருதுநகர் மாவட்டத்தில் வீடியோ பதிவாக சுற்றலில் விடப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் விருதுநகர் மாவட்டத்துக்கு ‘தண்ணி தெளித்துவிட்ட’ நிலையில், நிர்வாகிகள் சிலர் கடிவாளம் இல்லாத குதிரைகள்போல், தறிகெட்ட பேச்சினை தாறுமாறாகப் பேசிவருகின்றனர்.