Skip to main content

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்முடி தலைமையில் போராட்டம்... 

Published on 22/06/2020 | Edited on 22/06/2020
ponmudi mla

 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட டி. புதுப்பாளையம் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமங்கள் பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளன. இந்த ஆற்றில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மணல் சுரண்டப்பட்டு கட்டாந்தரையாக கிடைக்கின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து அப்பகுதி கிராமங்களில் விவசாயத்திற்கும், குடிக்கும் தண்ணீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்படி பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு அதிகாரிகள் முழுமூச்சில் இறங்கியுள்ளனர், மணல் குவாரி திறக்கக்கூடாது மூட வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருக்கோவிலூர் தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி தலைமையில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் கிராம மக்கள் விவசாயிகள் திரண்டு சென்று குவாரியை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் பாண்டியன், தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். அரசு தடை உத்தரவு காரணமாக போராட்டம் நடத்தக்கூடாது, கும்பல் கூடக்கூடாது என்று காவல்துறை கூறியது.

அப்போது பொன்முடி கூறுகையில், பெண்ணையாற்றில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது, சமீபகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் மணல் அள்ளுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள், அதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. மணல் குவாரி அமைக்க வேண்டுமானால் இப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டு இருக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டு மணல் குவாரி அமைக்க அனுமதி பெற்றுள்ளனர். அவை வைத்துக்கொண்டு பொது மணல் குவாரி அமைக்க முயற்சி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே இந்த குவாரியை உடனடியாக மூட வேண்டும். மூட மறுத்தால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்முடி கூறினார்.

அவருடன் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் கலந்து கொண்டனர். இந்த மணல் குவாரியை மூடக்கோரி வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் திருவெண்ணைநல்லூரில் நடத்தப்பட உள்ளது. அந்தக் கூட்டத்திற்கு பிறகு, மணல் குவாரிக்கு எதிராக மக்களின் போராட்டம் அனைத்து கட்சி ஆதரவுடன் விஸ்வரூபமெடுக்கும் என்கிறார்கள் பெண்ணையாற்றின் கரையோர கிராம மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.