Skip to main content

சட்ட அமைச்சர் சண்முகத்தின் பரபரப்பு அரசியல் 

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

 

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிமுக மந்திரியும் மா.செ.வுமான சண்முகம் மாவட்ட அளவில் கட்சி பதவிகள் கொடுப்பதில் தன் கட்டுப்பாட்டில் இப்போது கொண்டு வந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று காட்ட வேண்டும், அப்போதுதான் கட்சித் தலைமையில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவாக முடியும் என்பதை நிரூபிக்க தயாராகிவிட்டாராம் மந்திரி சண்முகம்.

 

cv shanmugam



 

அதன் எதிரொலியாக அவரது வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய அளவில் கட்சியினர் பதவிகளை சிலரிடமிருந்து பறித்துள்ளார். பலருக்கு புதிய பதவிகள் கொடுத்துள்ளார். ஒவ்வொரு ஒன்றியத்தையும் இரண்டாகப் பிரித்து புது முகங்களுக்கு ஒ.செ. பதவியை கொடுத்து தன் விசுவாசிகளை மிக வேகமாக வளர்த்து வருகிறார். 
 

ஏற்கனவே அமைச்சர் சண்முகத்திடம் இருந்த மா.செ. பதவியை பறித்து விழுப்புரம் டாக்டர் லட்சுமணன் அவர்களிடம் ஜெ. இருக்கும்போது வழங்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ் மூலம் கட்சிக்கு உள்ளே நுழைந்த டாக்டர் லட்சுமணன் மா.செ. பதவி,  ராஜ்யசபா எம்பி பதவி என பதவிகள் பெற்று அதிரடி அரசியல் செய்தார். அப்போது மந்திரி சண்முகத்தின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் லட்சுமணனை நோக்கி படையெடுத்தனர்.
 

இந்த நிலையில் ஜெ. மறைவையடுத்து சசிகலா சிறைக்கு சென்றார். அந்த நேரத்தில் லட்சுமணனிடமிருந்து மா.செ பதவியை மீண்டும் மந்திரி சண்முகத்திடம் வந்து சேர்ந்தது. இதையடுத்து  லட்சுமணனை நோக்கி ஓடியவர்கள் எல்லாம் மீண்டும் சண்முகத்தை நாடி ஓடி வந்தனர். இதனால் அமைச்சர் சண்முகம் தற்போது மாவட்ட அளவில் கட்சிப் பதவிகளில் தன் விருப்பப்படி மாற்றம் செய்துள்ளார். இதனால் கட்சிக்குள்  முணுமுணுப்புகள் இருந்தாலும்கூட கட்சி ஆட்சியில் இருப்பதால்  அமைச்சரிடம் விசுவாசமாக இருப்பது போல பலர் காட்டி கொள்கிறார்கள்.
 

மாவட்ட அரசியலிலும் சரி, மாநில அரசியலும் சரி அமைச்சர் சண்முகத்திற்கு அரசியல் நெளிவு சுளிவுகளை மிகச்சரியாக சொல்லிக்கொடுத்து அவரை வழிநடத்தி வருகிறார் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன். விழுப்புரம் தெற்கு மா.செ.வாக உள்ளவர் எம்எல்ஏ குமரகுரு. இவர் முதல்வர் எடப்பாடியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளவர். ஆனால் மந்திரி சண்முகம் ஓபிஎஸ் - இபிஎஸ் என யாருடைய விசுவாசியும் இல்லாமல் தனித்தன்மையோடு தன் அரசியலை நடத்திக் காட்டி வருகிறார்.


 

அதை மேலும் பலப்படுத்த தனது ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகளை கொடுத்து அதன்மூலம் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மாவட்டத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று கட்சி மேலிடத்தில் தான் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்க தயாராகி வருகிறாராம் மந்திரி சண்முகம்.
 

ஏற்கனவே திமுகவில் இதுபோன்று ஒன்றிய அளவில் கட்சி பதவிகள் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் அதிமுகவின் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் அளவிற்கு ஈடுகொடுத்து கட்சிப் பணி செய்வதில் திமுகவினர் மத்தியில் இன்னும் கூடுதல் வேகம் தேவை என்கிறார்கள் திமுகவினர். மாவட்டத்தில் மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். செஞ்சி மஸ்தான், எக்ஸ் மந்திரி பொன்முடி, எக்ஸ் எம்எல்ஏ அங்கயற்கண்ணி என மூவர் இருந்தும் திமுக தரப்பில் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இன்னும் வேகம் காட்ட வேண்டும் என்கிறார்கள் திமுக தொண்டர்கள். வரும் தேர்தல்களில் மாவட்டத்தில் யார் கை ஓங்கும் திமுகவா? அதிமுகவா? என்ற பரபரப்பான டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.