Skip to main content

இடைத்தேர்தல் முடிவுகள் இனி வரும்கால அரசியலுக்கான நல்ல தொடக்கம்! ராமதாஸ்

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
 

அதில், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியின் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெற்றுள்ளனர். வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ramadoss



விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன  44,782 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி சாதாரணமான வெற்றி அல்ல; சிறப்பான வெற்றி. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுமே எதிர்க்கட்சிகள் வசம் இருந்தவையாகும். அவற்றை ஆளும் அதிமுக கைப்பற்றியிருக்கிறது. 2016-க்குப் பிறகு எதிர்க்கட்சிகள் வசமிருந்த தொகுதிகளை அதிமுக பறித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பெருமளவில் பா.ம.க. பங்களித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
 

பொதுவாகவே தேர்தல்கள் சாதனைகளின் அடிப்படையில் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஆனால், திமுக  இந்த இடைத்தேர்தல்களில் அருவருக்கத்தக்க உத்திகளைக் கையாண்டது. வன்னியர்களை அழிக்க வேண்டும்; அவமானப்படுத்த வேண்டும் என்பதையே அடிப்படைக் கொள்கையாகவும், செயல்பாடாகவும்  கொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக வன்னியர்கள் நலனில் அக்கறை கொண்டவரைப் போன்று நடித்தார். வன்னிய மக்களுக்கு தாங்கள் தான் இட ஒதுக்கீட்டைக் கொடுத்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்ததன் மூலம் வன்னியர்கள் 9 ஆண்டுகால சமூகநீதிப் போராட்டங்களையும், 21 சொந்தங்களின் உயிர்த்தியாகத்தையும் கொச்சைப்படுத்தினார். திமுக ஆட்சியில் பலமுறை நான் வலியுறுத்தியும் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கலைஞர் மறுத்து விட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உள் ஒதுக்கீடு வழங்கப் படும் என்று கூறி ஏமாற்ற முயன்றார். மு.க. ஸ்டாலினின் பொய் வணிகத்தை அறிக்கைகள் மூலமாகவும், பிரச்சாரத்தின் மூலமாகவும் அம்பலப்படுத்தினேன். அதன்பயனாக, எந்த மக்களை மு.க. ஸ்டாலின் ஏமாற்ற முயன்றாரோ, அதே மக்களே அவருக்கு படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளனர்.


 

திமுகவுக்காக செய்த தியாகங்களின் அடிப்படையில் ஒப்பிட்டால் ஏ.கோவிந்தசாமி அவர்களின் உயரத்தை கலைஞரால் எந்தக் காலத்திலும் எட்டிப்பிடிக்க முடியாது. ஆனால், கலைஞருக்கு அருங்காட்சியகம் அமைக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை வசூலித்து பணிகளைத் தொடங்கிய ஸ்டாலின், திமுகவுக்காக உதயசூரியன் சின்னத்தைக் கொடுத்த ஏ.ஜி. அவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக மணிமண்டபம் கட்டாமல், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணி மண்டபம் அமைப்போம் என்று கூறினார். இதெல்லாம் தங்களை முட்டாள்கள் ஆக்கும் முயற்சி என்பதை வன்னியர்கள் தெளிவாக உணர்ந்திருந்தனர். அதனால் தான் தோல்வியை பரிசாகக் கொடுத்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் பக்கம் தான் தாங்கள் இருப்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.
 

சுருக்கமாக கூற வேண்டுமானால், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது துதிபாடிகளும் மூட்டை, மூட்டையாக பொய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முயன்றனர். ஆனால், விழிப்புணர்வு பெற்ற விக்கிரவாண்டி மக்களிடம் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை.  மக்களவைத் தேர்தலில் பொய்களை விதைத்து, வெற்றிகளை அறுவடை செய்த தங்களை ஏமாற்றிய திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். சிலரை பல நாள் ஏமாற்றலாம்; பலரை சில நாள் ஏமாற்றலாம்; ஆனால் தங்களை  எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்பதை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி மக்கள் நிரூபித்துள்ளனர். இது அவர்களின் குரல் மட்டுமல்ல.... ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலும் இது தான்.


 

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும். இரு தொகுதிகளிலும்  வெற்றிக்காக கடுமையாக உழைத்த அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் மேலாக, பொன்னான வாக்குகளை வழங்கி, வெற்றிகளை பரிசாக அளித்த வாக்காளர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.