Skip to main content

திமுக ரூ. 75 கோடி யும், அதிமுக 75 கோடியும் விக்கிரவாண்டியில் இறக்கியுள்ளது... வ.கெளதமன் கலெக்டரிடம் புகார்

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

 

தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கெளதமன். இவர் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பண விநியோகம் செய்வதாக புகார் அளித்தார். 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது ஜனநாயக நேர்மையற்ற தேர்தலாக அரசு இயந்திரங்களால் நடத்தப்படுகிறது. கேட்பாரற்று என்னென்னல்லாம் கீழ்த்தரமான வேலைகளை நடத்த முடியுமா அனைத்து வேலைகளையும் குறிப்பாக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் நடத்துகிறது. இதனை வேடிக்கை பார்ப்பது என்பது நேர்மையற்ற செயல்.

 

vikravandi by election



திமுக 75 கோடி ரூபாயும், அதிமுக 75 கோடி ரூபாயும் கார்களில் வைத்துக்கொண்டு பணப்பட்டுவாடா செய்வதும், பரிசுப் பொருட்கள் கொடுப்பதுமாக உள்ளனர். அதிமுகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். இதனை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது என்பது ஜனநாயக நாட்டுக்கு அழகல்ல. ஜனநாயக சுடுகாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் இங்கு நடக்கும் இந்தக் கூத்துக்கள்தான். 


 

மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனிடம் இவை அத்தனையும் நாங்கள் எடுத்துச் சொன்னோம். சாமானியர்கள் வந்தால் அவர்களுடைய வாகனங்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர். ஆனால் முதலமைச்சர் வண்டியில், அமைச்சர்கள் வண்டியில், திமுகவின் முக்கியமான எம்பிக்கள் வண்டியிலும் பணம் மூட்டை மூட்டையாக வந்து கொண்டே இருக்கிறது. நான் சொல்கிறேன் 150 கோடி ரூபாய் உள்ளே இருக்கு. தேடுதல் வேட்டையை நடத்துங்கள். பணத்தை அபகரித்து அரசு கஜானாவுக்கு எடுத்து வாருங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் சொன்னேன். 
 

அந்தப் பணம் எங்களுக்கு தெரிந்து இப்போது வரவில்லை. முன்பாகவே வந்திருந்தால் என்ன செய்வது என்று கேட்கிறார். பணம் இருக்கு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கே தெரியும். பணம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். 


 

பணம் கொடுத்துத்தான் ஓட்டுக்களை வாங்கி, இந்த மக்களிடம் இருந்து மீண்டும் கொள்ளையடிக்க வேண்மென்றால் 50 ஆண்டு காலமாக ஆண்ட திமுக, அதிமுகவுக்கு வெட்கம் இல்லையா. 50 வருடமாக நீங்கள் நல்லது செய்திருந்தால் புதிதாக நாங்களெல்லாம் இங்க வந்து நிற்க முடியமா?
இப்படி ஒரு மோசமான நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதனை தட்டிக்கேட்ட எங்கள் மீது வழக்கு போட்டுள்ளார்கள். 
 

எந்த தகுதியும் இல்லாதவர்கள், கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருப்பவர்கள் கூச்சமில்லாமல் பணத்தை வைத்து ஓட்டு கேட்க வந்துள்ளார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தேர்தல் ஆணையம்தடுத்து நிறுத்த வேண்டும்.  ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

விளவங்கோடு தொகுதி காலியானதாகத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
A letter to the Election Commission stating that Vilavankode constituency is vacant

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயதாரணி கடந்த 24 ஆம் தேதி பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையும் அவரைக் கட்சியிலிருந்து நீக்கியதோடு, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டப் பேரவை முதன்மைச் செயலருக்கு, 'விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவில் சேர்ந்து விட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று கடிதம் அனுப்பி இருந்தார். அதே சமயம் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை கைப்பட எழுதி சட்டப்பேரவை தலைவருக்கும் சட்டப்பேரவையினுடைய முதன்மை செயலாளருக்கும் அனுப்பி இருந்தார் விஜயதாரணி. இதனையடுத்து விஜயதாரணியின் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

Next Story

நேரில் ஆஜரான சீமான்; வழக்கை ஒத்திவைத்த நீதிபதி

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

Seeman in person; The judge adjourned the case
கோப்புப்படம்

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை கூட்டம் பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் நடைபெற்றது. இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு)  வரும் நவம்பர் 6-ந் தேதி அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் நீதிமன்றத்தில் இன்று காலை சீமான் நேரில் ஆஜராகி இருந்தார். இதையடுத்து சீமான் மீதான வழக்கை நவம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.