Skip to main content

“விஜயபிரபாகரான நான்..” - குட்டி கேப்டனின் கம்பீரம்!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

சிவகாசியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

vijayaprabhakaran

 

“விஜயபிரபாகரான  நான்” என்று கம்பீரமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் பேசியபோது “இந்த பெல்ட்டே கேப்டன் கோட்டைன்னு சொல்லுவேன். எங்க அப்பா உங்களைச் சந்திக்க என்னை அனுப்பியிருக்கார். ராஜேந்திரபாலாஜி அண்ணன் என்னையே, ஒருமையில பேச வேணாம்னு சொல்லிருக்காரு. அண்ணன் சொன்னா நான் கேட்டுக்கிறேன். அழகர்சாமி அண்ணன் படிப்புல கொஞ்சம் கம்மியா இருந்தாலும், அவருக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கிற அளவுக்கு வளர்ந்து, இன்று எம்.பி. கேன்டிடேட் ஆகியிருக்காரு. அதுக்குக் காரணம் கேப்டன். அது ஏன்னா. தேமுதிகவுக கடைக்கோடித் தொண்டனா இங்கே எனக்கு முன்னால எத்தனையோ பேர் நிக்கிறீங்க. நாளைக்கு உங்கள்ல எத்தனை பேரு எம்.பி., எம்.எல்.ஏ.ன்னு என் கண்ணுக்குத் தெரியல. அதேமாதிரிதான், கேப்டன் வந்து அழகர்சாமி அண்ணனை தேர்வு செஞ்சிருக்காரு. பயன்படுத்திக்கிறது உங்களோட புத்திசாலித்தனம். கூட்டணிகள் வரும் போகும். ஆனா, என்றைக்கும் தெய்வத்தோடும் மக்களோடும்தான் எங்க கூட்டணி.  திமுகவும் காங்கிரசும் எதுக்கு ஓட்டு கேட்டு வர்றாங்கன்னு எனக்குத் தெரியல. ஏன் இதைச் சொல்றேன்னா? அவங்களோட பிரதமர் வேட்பாளர் யாருன்னு அவங்களுக்கே தெரியல.


பிரதமர் யாருன்னே தெரியாம அந்தக் கூட்டணிக்கு எதுக்காக ஓட்டு போடணும்? இவ்வளவு நாள் நாம எல்லாருமே ஹார்ட் ஒர்க்கர்ஸா இருந்தோம். உழைச்சி.. உழைச்சி. உழைச்சி.. உழைச்சிட்டே இருந்தோம். இந்தத் தேர்தல்ல கொஞ்சம் ஸ்மார்ட் ஒர்க்கர்ஸா இருந்து கொஞ்சம் புத்திய யோசிங்க. புத்திய யோசிச்சு சிந்திச்சு இந்தவாட்டி தேர்தலுக்கு ஓட்டு போடுங்க. மோடிஜி சில முடிவுகள் எடுத்து கொண்டுவந்தாங்க. அது நமக்கு கஷ்டமா இருந்திருக்கலாம். இல்லாம இருக்கலாம். அவர் எடுத்ததெல்லாம் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு எடுத்த முடிவுகள். அந்தக் காலத்துல மாட்டு வண்டில போனோம். இப்பவும் மாட்டு வண்டிதான் ஓட்டிக்கிட்டிருக்கோம். சில மாற்றங்கள் வரும்போது நமக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அதையெல்லாம் தாங்கிக்கிட்டு நீங்க ஆதரிச்சீங்கன்னா.  பின்னாடி ஃப்யூச்சர்ல நம்ம பசங்களுக்கு எல்லாமே நல்லதா  வந்துசேரும்னு நான் நினைக்கிறேன்” என்றார் இயல்பாக.   
 

வாக்காளர்களுக்கு புத்திமதி சொல்லும் அளவுக்கு, அதற்குள் அரசியலில் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டார் குட்டி கேப்டன்!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூடாரத்தையே காலி செய்து விட்டார்கள்” - கடுமையாக விமர்சித்த பிரேமலதா!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Premalatha Vijayakanth who strongly criticized pmk in election field 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார். அப்போது அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரம் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாத புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கலந்துகொள்ளவில்லை.

Premalatha Vijayakanth who strongly criticized pmk in election field 

இந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், “ஜெயலலிதா இல்லாத சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி  சந்திக்கும் முதல் தேர்தல் இது. நான் தே.மு.தி.க. பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, விஜயகாந்த் மறைந்த பிறகு முதல் முறையாக சந்திக்கும் பாரளுமன்ற தேர்தல் இது. நாங்கள் இருவரும் ராசியான வெற்றி கூட்டணியை வரும் காலத்தில் நிச்சயமாக சாதித்துக் காட்டுவோம். அ.தி.மு.க.வும் - தே.மு.தி.கவும் மக்களுக்கு ஒரு சிறந்த அடையாளமான கட்சியாக விளங்குகிறது. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.

இரண்டு நாட்கள் வரைக்கும் கூட்டணியில் இருக்கின்றோம் இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் எல்லாம், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடனே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூடாரத்தையே கிளப்பி வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். ஆனால் தே.மு.தி.க. அப்படி கிடையாது. ஒரு வார்த்தை சொன்னால் அந்த வார்த்தையில் உறுதியாக இருப்போம். நம்பிக்கையாக இருப்போம். ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கொங்கு மண்டலக்காரர்கள் மரியாதை மிக்கவர்கள். அன்பானவர்கள். அதே போல நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என ஒவ்வொரு முறையும் நிரூபித்து காட்டுகிறார். ஒரு வார்த்தை சொன்னால் சொன்னது தான். துளசி வாசம் மாறலாம். தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. என்ன நடந்தாலும் அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இருக்கும் என உறுதி கொடுத்தேன்” எனப் பேசினார். 

Next Story

“எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது” - வைகோ குற்றச்சாட்டு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Vaiko has alleged that Arvind Kejriwal was arrested to intimidate the opposition parties

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இந்தியா கூட்டணி சார்பில் நடக்கும் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் அவர் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில்  பெரம்பலூர், திருச்சி  திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். இதில் கலந்து கொள்வதற்காக வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது, “வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள சவால். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள், சனாதன சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதிலே இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தை துவங்குகிறார். தமிழகம் - புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துதான் டெல்லி முதலமைச்சரை கைது செய்து கொண்டு போனார்கள்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள். இந்துத்துவ அஜண்டாவை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கூட மறுத்து வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஆகவே ஜனநாயகத்திற்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் சம தர்ம கொள்கைக்கும் விரோதமாக ஒரு கூட்டம் இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது. இது பெரியார் பூமி, அறிஞர் கலைஞருடைய பூமி. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகத்தான் கெஜ்ரிவால் கைது. இதனை பாரதிய ஜனதா ஒத்துக் கொள்ள மறுக்கிறது. அவர்கள் எதைத்தான் ஒத்துக் கொள்வார்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து, நேற்று திருச்சிக்கு வந்த துரை. வைகோ திருவரங்கத்தில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.