Skip to main content

அடம்பிடிக்கும் விஜயகாந்த் மகன்... விஜயகாந்த் மாதிரியே வேணும்... தேர்தலுக்கு ரெடி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தேமுதிக சார்பாக பிரேமலதாவும், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடாமல் இருந்தார். கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்த போது, அவரது பிரச்சார வாகனத்தை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பயன்படுத்தி வந்தார். தற்போது தேமுதிகவில் இருக்கும் இரண்டு பிரச்சார வாகனங்களை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும், பிரேமலதாவும் பயன்படுத்தி வந்தனர். 
 

dmdk



தற்போது விஜயகாந்தின் உடல்நிலை தேறி வருவதால் இனி வரும் தேர்தலில் அவரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தை விஜயபிரபாகரன் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜயகாந்த் மகனுக்கும் பிரச்சார வாகனம் வாங்கலாம் என்று யோசித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து சேட்டிலைட் டிவி, பெட், டைனிங் டேபிள்' என சகல வசதியுடன் கட்சி நிதியில் இருந்து புது பிரச்சார வாகனம் தேமுதிக சார்பாக வாங்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு தேமுதிக தயாராகி வருவதாக சொல்கின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ (படங்கள்)

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், வட சென்னை மக்களவைத் தொகுதியில், அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில், இன்று (16-04-24) வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது, ராயபுரம் மனோ வந்த வண்டியின் பின்னால், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வேடமணிந்த ஒருவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அவருக்கு முன்னால், தாரை தப்பட்டையுடன் ஆண்களும், பெண்களும் ஆடிக்கொண்டே வந்தனர். 

 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

Next Story

“மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள்” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai says People of North India have also realized it

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரின் போது பா.ஜ.கவும், பா.ஜ.க கூட்டணிக் கட்சியும் 370 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி உரையாற்றினாரே?

“அவருக்கு எதிர்க்கட்சி மாடம் கிடைக்கிறதா என்று பார்க்க சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் செய்த ஊழல்களை பற்றியெல்லாம் தென்னிந்திய மக்களுக்கு ஏற்கெனவே தெரியும். வட இந்திய மக்கள் கொஞ்சம் தெரியாமல் இருந்தார்கள். இப்பொழுது, வட இந்திய மக்களும் அதை உணர ஆரம்பித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் மோடிக்கு அந்தப் பாடத்தை வட இந்திய மக்களும் கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள், தங்களுடைய தொகுதி குறித்த கோரிக்கைகள் எதையுமே அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. மற்ற எம்.பிக்கள் பேசுவதை மட்டும் காது கொடுத்து கேட்காத இந்தச் செவிட்டு அரசு, மோடி பேசுவது மட்டும் நாங்கள் கேட்டுக் கொண்டு வர வேண்டுமா? நாங்கள் அப்பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் அவர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்தார்கள்”.

தென்னிந்தியாவில் பா.ஜ.க வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழகத்திற்கு வரும்போது வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?

“நோட்டா கூட போட்டி போட முடியாத சூழல்தான் கடந்த தேர்தலில் நடந்தது. இப்பொழுது நோட்டா அளவுக்கு வரலாம். இன்னும் சில நாட்களில் தேர்தல் வரப்போகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அதைப் பற்றி நீங்களே தெரிந்து கொள்வீர்கள். இந்தத் தொகுதியில் நிற்கக்கூடிய பாஜக வேட்பாளர் கூட இந்த ஊரைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சென்னையில் இருந்து வந்திருக்கிறார். இங்கே பா.ஜ.க வலுவாக இருக்கிறது என்றால் இங்கே இருக்கக்கூடிய பா.ஜ.க வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டியதுதானே. சென்னையிலிருந்து வேட்பாளரை கூட்டிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

திருவண்ணாமலையில் ஏசி தரத்துடன் இருக்கின்ற பொது நூலகத்தைப் போல இளைஞர்களுக்கு வேறு என்ன ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருக்கிறீர்கள்?

“நூலகங்களை விரிவுபடுத்தி ஒவ்வொரு தொகுதிக்கும் நூலகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அந்த நூலகத்தில் மக்கள் பயன் பெறுகின்ற, மாணவர்கள் பயன்பெறுகின்ற புத்தகங்கள் வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். ஏனென்றால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களைத் தயார்ப் படுத்தும் நோக்கத்துடன் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்.  அது சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது இந்தத் திட்டம் தொடரும்”.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. தொழிற்சாலைகள் அமைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? இந்த மாதிரி கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறீர்களா?

“நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய 507 கேள்விகளில் ஒன்றிய அரசின் கீழ் எத்தனை துறைகள் இருக்கிறதோ, அந்தத் துறைகள் அடிப்படையில் நான் கேள்வி கேட்டிருக்கிறேன். ஆனால், அவர்கள் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.  மாநில அரசு திட்டத்தின் மூலமாக, இந்தத் திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்”.

அண்ணாமலையார் கோவிலை மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்களே?

“திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலை கோவிலுக்கு சிமெண்ட் சாலைகளை அமைச்சர் போட்டிருக்கிறார். இன்றைக்கு இந்தத் திருவண்ணாமலையை மாநகராட்சியாக, தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். மொத்தமாக் திருவண்ணாமலை நகருக்கு அடிப்படை வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதேபோல், கார்த்திகை தீப நாளில் 45 லட்சம் மக்கள் எதிர்கொள்ளும் அளவிற்கு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் செய்து கொண்டிருக்கிறார். அதில் நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்பாக அந்தந்த நிதிகளை பயன்படுத்தி என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறோம்”.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழக முதலமைச்சர், அமைச்சர் உதயநிதியும் இதுவரைக்கும் விவசாயி குறித்துப் பேசவே இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

“விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி, நமது முதலமைச்சர்தான் தள்ளுபடி செய்தார். இந்தியாவிலேயே விவசாயிகள் கடனை முதன் முறையாக தள்ளுபடி செய்தது டாக்டர் கலைஞர்தான். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது கலைஞர்தான். அவர் வழியில் நமது முதலமைச்சர், விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். இந்த இரண்டரை வருஷத்தில் 2 லட்சம் மின்சாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

இப்போது, தேர்தல் அறிக்கையில் விவசாய கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று சொல்லி இருக்கிறார். இதைவிட விவசாயிகளைப் பற்றி யார் அதிகமாக பேசுவது?. மோடி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? அல்லது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விவசாயிகளைப் பற்றி பேசி இருக்கிறார்களா? விவசாய கடன் தள்ளுபடி பற்றி மோடியும், எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்காகவே தனிப்பட்ட தனி பட்ஜெட்டை போட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.