கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (14/04/2020) உரையாற்றினார். கரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், ஏழைகள், தினக்கூலி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் ஏப்ரல் 20- ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், "மக்கள் நலனே முக்கியம் என்பதால் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

admk

இந்த நிலையில் கட்சிகளோ தன்னார்வலர்களோ நிவாரணப் பொருட்கள் வழங்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்தது. இது பற்றி விசாரித்த போது, தங்களைத் தாண்டி எதிர்க்கட்சியான தி.மு.க.வும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்றவையும் களப்பணியில் இறங்கியதை ஜீரணிக்க முடியாமல் தான் எடப்பாடி அரசு அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது என்கின்றனர். மேலும் 21 நாள் லாக் டவுன் நேரத்தில், தி.மு.க.வினர் 80 சதவீதமும், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., மற்ற கட்சியினர் 20 சதவீதமும் உதவி செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பயனடைந்தவர்களிடம் மத்தியில், இந்தக் கட்சிகளுக்கு மதிப்பு உயர்ந்திருப்பதை மாநில உளவுத்துறையினரும் சில அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடியிடம் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் அதனால் தான் முதல்வர் எடப்பாடி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கின்றனர்.