Skip to main content

ஓ.பி.எஸ்-ஐ தனியாக சந்தித்த வேலுமணி தங்கமணி - ரகசியத்தை உடைத்த ஜெ.சி.டி. பிரபாகரன்

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

Velumani Thangamani who met OPS alone - JCT  Prabhakaran

 

அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதற்காக ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தனர். எனினும் கட்சியின் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமல் தான் இருக்கிறது. 

 

இந்நிலையில், எடப்பாடி ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக கட்சி கூட்டத்தில் பேசிய ஒரு வீடியோ பெரும் வைரலானது. அதில் அவர், “கட்சி நன்றாக இருக்கும் போதே ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தினார். இருந்தும் கட்சி உடையக்கூடாது என எடப்பாடி பழனிசாமி அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்தார். கட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சனை வந்தது” என ஓ.பி.எஸ். மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

 

    “ஓபிஎஸ் மகள் வீட்டில் நடந்த சமாதான பேச்சு வார்த்தை பிரச்சனையில் முடிந்தது” - முன்னாள் அமைச்சர் தங்கமணி

 

இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஜெ.சி.டி. பிரபாகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தங்கமணி பேச்சுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. காரணம் இந்தக் கட்சியில் அவர்கள் சார்பில் பொய் சொல்வதற்கு ஜெயக்குமாரைமட்டும் தான் வைத்திருந்தார்கள் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது அதில் தங்கமணியையும் களத்தில் இறக்கியிருக்கிறார்கள் என்பது அவரது பேச்சிலிருந்து தெரிகிறது. தர்மயுத்தம் துவங்கிய காலத்தில் ஓ.பி.எஸ். பின் மக்களும், தொண்டர்களும் திரண்டு நின்றதை நாடே பார்த்தது.  

 

அப்போது ஓ.பி.எஸ். ஒரு நாள் எங்களை அழைத்து, ‘நிலைமை இப்படியே போய்க்கொண்டிருந்தால் கட்சியும், ஆட்சியும் வீனாகிவிடும். என்னால் இந்தக் கட்சி கெட்டது, பிளவுபட்டது, என்னால் எல்லாம் முடிந்தது எனும் நிலைமை என்றும் வரக்கூடாது. நான் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவன் அதனால், கட்சியில் ஒற்றுமையை விரும்புகிறேன். அதனால், தர்மயுத்தத்தில் நாம் வைத்திருக்கும் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் இணைவோமா’ என்று எங்களிடம் கேட்டுவிட்டு அந்த தர்ம யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார். 

 

இந்த தர்மயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, பல்வேறு நிலையில் பலர் முயற்சி எடுத்தனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக ஓ.பி.எஸ். சார்பில் நானும், எடப்பாடி சார்பில் வைத்திலிங்கமும் தான் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை துவங்கினோம். அதன் பிறகு தங்கமணி, வேலுமணி ஆகியோர் வந்தனர். அப்போது ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து நான், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினோம். அதன்பிறகு பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன், மைத்ரியேன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மற்றவர்கள் அந்தக் குழுவில் இணைந்து பேச்சு வார்த்தை நடந்தது. 

 

இந்த சமயத்தில் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் ஓ.பி.எஸை தனியாக சந்தித்து, அவர் கரங்களை பிடித்துகொண்டு என்னென்ன சொன்னார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்கு நன்றாக தெரியும். அதில், ‘மீதியிருக்கும் காலத்தில் அவர் (இ.பி.எஸ்.) முதலமைச்சராக இருந்துவிடட்டும். அடுத்த முறை நீங்கள் (ஓ.பி.எஸ்) தான் முதலமைச்சர் எனும் உத்தரவாதத்தை தருகிறோம்’ என தங்கமணி சொன்னார். 

 

இதுமட்டுமல்ல, ‘இவ்வளவு பெருந்தன்மையாக நீங்க விட்டு கொடுக்கிறீர்கள். நாங்கள் சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களின் நிபந்தனைகளை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொண்டு, உடனடியாக நீங்கள் இணைய வேண்டும் என்பதில் ஆர்வாம் காட்டுகிறோம்’ என்று சொன்னபோது,  கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளில் ஒன்றைக்கூட அவர் நிறைவேற்றவில்லை” என்று தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.