Skip to main content

வேலூர் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? டிடிவி தினகரன் விளக்கம்

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

 

ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.
 

இந்நிலையில் டி.டி.வி. தினகரன் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 

பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களை உணர்ந்து எதிர்காலத்தில் அவற்றையும் எதிர்கொண்டு வெற்றிகளை குவிக்கும் தாகத்தோடு காத்திருக்கும் உங்களின் எழுச்சிக்கு முதலில் தலை வணங்குகிறேன்.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் பெற்ற வெற்றியால் எரிச்சலுற்ற நம் எதிரிகள் நம்மை வீழ்த்துவதற்கான சதி வேலைகளை இருமடங்காகச் செய்ய ஆரம்பித்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்தது. நீதிமன்ற அனுமதியோடு தனி இயக்கம் கண்டு நாம் இயங்கி வந்தபோது நமக்கென ஒரு தனி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததை எதிர்த்து மிக நீண்ட சடடப்போராட்டத்தை நாம் நடத்தினோம்.


  ttv dhinakaran


வேட்பு மனு தாக்கலுக்கு சில மணி நேரம் முன்பு வரை நாம் யார்? அரசியல் கட்சியின் வேட்பாளரா? சுயேட்சை வேட்பாளரா? என்பதைக்கூட உறுதிபடச் சொல்ல முடியாத ஒரு சோதனையை வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்காது.
 

கடைசியில் சுயேட்சைகளாக தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டு, அதன்பிறகு சில நாள் காத்திருப்புக்குப் பிறகு பரிசுப் பெட்டகம் சின்னத்தை பெற்றோம். அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததிலும், நாம் சுயேட்சைகள் என்பதால் மிகப் பெரும்பாலான தொகுதிகளில் நமது சின்னம் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குப் பதிவு எந்திரங்களில் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
 

இத்தகைய தடைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணியை ஆரம்பித்தோம். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சேர்ந்து நம்மில் சிலரை அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

ஆனால் நமது இயக்கத்துக்கு நிஜமான மக்கள் ஆதரவு இருக்கிறது. நமது இயக்கத்தை தேர்தல்ஆணையத்தில் பதிவு செய்யும் பணி ஆகஸ்டு மாத இறுதி வாக்கில் நிறைவு பெறக்கூடும். அதுவரை நாம் சுயேட்சை என்ற அடையாளத்தோடு தான் தேர்தல் களத்தில் அறியப்படுவோம்.
 

அந்த அடிப்படையில் இந்த வேலூர் தொகுதி தேர்தலுக்காக ஒரு சின்னத்தை பெற்று, தொடர்ந்து வர உள்ள நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு தனித்தனி சின்னங்களை பெற்று நாம் தேர்தலை சந்திப்பதும், நமது இயக்கத்தை பதிவு செய்யும் பணி நிறைவடைந்து ஒரு நிரந்தர சின்னத்தை பெற்று அதன்பிறகு வரும் தேர்தல்களை சந்திப்பதும் என பல சின்னங்களில் போட்டியிடுவது மக்களிடம் மட்டு மல்ல - நமது தொண்டர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

 

இதை மனதில் கொண்டு நமது இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வேலூர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம்.


 

இந்த முடிவு பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டது. தேர்தல் களத்தைக் கண்டு அ.ம.மு.க. பயப்படுகிறது... என்றெல்லாம் நமது எதிரிகள் திட்டமிட்டு வி‌ஷமப் பிரச்சாரம் செய்யக்கூடும் அவற்றையெல்லாம் புறந்தள்ளுங்கள்.
 

நமது இயக்கத்துக்கான நிரந்தரமான புதிய அடையாளத்தோடு மக்களை சந்திப்போம். வெற்றிகளை ஈட்டுவோம். தமிழகத்தை இந்த துரோகக்கூட்டத்திடம் இருந்து மீட்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.