Skip to main content

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் பாமக எடுக்கும்... -அன்புமணி

Published on 10/06/2020 | Edited on 10/06/2020
Vedanthangal Bird Sanctuary


வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும், அப்பகுதியில் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து சட்டப் போராட்டங்களையும், அரசியல் நடவடிக்கைகளையும் பா.ம.க. எடுக்கும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை 40% குறைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும், அத்தகைய திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்றும் வனத்துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சார்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கம் தனியார் மருந்து ஆலைகளுக்கு ஆதரவான வனத்துறையின் செயல்பாடுகளை மூடி மறைக்கும் முயற்சி என்பதைத் தவிர வேறில்லை.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கடந்த 1998-ஆம் ஆண்டு அறிவிக்கை செய்யப்பட்டதாகும். அப்போது வேடந்தாங்கல் ஏரி அமைந்துள்ள 73 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதிகள் சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டன. இப்போது 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் முதல் ஒரு கிலோமீட்டர் சுற்றளவை மையப் பகுதியாகவும், அடுத்த இரு கிலோமீட்டர் சுற்றளவை இடைநிலைப் பகுதியாகவும், கடைசி இரு கிலோ மீட்டர் பகுதியை சுற்றுச்சூழல் பகுதியாகவும் வகைப் படுத்த முடிவு செய்திருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் முயற்சியாகும்.

 

 


சரணாலயங்களை சுற்றிலும் சுற்றுச்சூழல் பகுதிகள்  (Eco Sensitive Areas- ESA) உருவாக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. வேடந்தாங்கலில் சுற்றுச்சூழல் பகுதி உருவாக்கப்பட வேண்டும் என்றால், அது ஏற்கனவே சரணாலயப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வெளியில் தான் செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழக வனத்துறையோ, இருக்கும் 5 கி.மீ சுற்றளவில் இந்த பகுதிகளை உருவாக்க முயல்கிறது. அதன்படி சரணாலயப் பகுதி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில்  சுருக்கப்பட்டு விடும். இது தான் உண்மை. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி மிகக் கடுமையாக எதிர்க்கிறது.

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின்படி சரணாலயத்தின் மையப்பகுதியில் தீங்கு விளைவிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க முடியாது. அதன்படி பார்த்தால், இப்போதுள்ள அமைப்பின்படி, சரணாலயம் அமைந்துள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்  எந்த தொழிற்சாலைகளையும் அமைப்பதற்கோ, அதற்கு வெளியில் உள்ள ஆலைகளை சரணாலயப் பகுதிகளுக்குள் விரிவாக்கம் செய்யவோ அனுமதி கிடைக்காது. ஆனால், தமிழக வனத்துறை செய்ய உத்தேசித்துள்ள வகைப்படுத்துதலின்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு மட்டும் தான் மையப் பகுதி என்பதால், அதற்கு வெளியில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க முடியும். அதற்காகத் தான் சரணாலயத்தின் நிலப்பரப்பை வகைப்படுத்தும் பணிகளை வனத்துறை தீவிரமாக மேற்கொள்கிறது.

 

 

anbumani ramadoss


 

இத்தகைய வகைப்பாடுகளை மேற்கொள்ளாவிட்டால், வேடந்தாங்கல் ஏரியிலிருந்து 5 கிமீ சுற்றளவு  எல்லையில் இப்போது விவசாயிகள் மேற்கொண்டு வரும் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற தகவலையும் வனத்துறை பரப்பி வருகிறது. இது பொய்யானது. வேடந்தாங்கல் சரணாலயம் அமைக்கப்படுவதற்கு முன்பே 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 28 கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயம் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். பறவைகள் சரணாலயப் பகுதிகளில் சொந்த நிலங்களில் மட்டுமின்றி, பொது நிலங்களிலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்ள எந்தத் தடையும் கிடையாது. அதனால் உழவர்களுக்கு எந்த காலத்திலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஒட்டுமொத்த 5 கிலோ மீட்டர் சுற்றளவும் மையப் பகுதியாக இருந்து வருகிறது.  அதனால் அந்த பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. ஆனால், விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டு ஆம்கோ பேட்டரீஸ் ஆலை 2010-ஆம் ஆண்டிலும் ஆர்டைன் ஹெல்த்கேர் தொழிற்சாலை 2011&ஆம் ஆண்டிலும்  திறக்கப்பட்டுள்ளன.  சரணாலயப் பகுதிகளுக்குள் இந்த ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான இந்த விதிமீறலுக்கு துணை போனவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

 

nakkheeran app



இந்த பகுதியில் செயல்பட்டு வரும் இன்னொரு மருந்து தொழிற்சாலை வேடந்தாங்கல் சரணாலயமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாக 1990-களின் தொடக்கத்தில் பிரதீப் டிரக் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டு, பின்னர் 2001-ல் சன் பார்மா நிறுவனத்தால் வாங்கப்பட்டது ஆகும். இப்போது அந்த ஆலையை பறவைகள் சரணாலயத்தின் உட்பகுதி வரை விரிவாக்க சன்பார்மா தீர்மானித்திருப்பதுடன், அதற்கான அனுமதி கோரி மத்திய வனம் & சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருக்கிறது.

தனியார் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சரணாலயத்தை வகைப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்; இடைநிலைப் பகுதியை அமைப்பதாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பகுதியை உருவாக்குவதாக இருந்தாலும் அது இப்போதுள்ள 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் தான் செய்யப்பட வேண்டும். 5 கிலோ மீட்டர் சுற்றளவும் சரணாலயத்தை மையப்பகுதியாக நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதை பாதிக்கும் வகையிலான அனைத்து முடிவுகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் எந்த தொழிற்சாலையையும் அங்கு அனுமதிக்கக்கூடாது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும், அப்பகுதியில் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து சட்டப் போராட்டங்களையும், அரசியல் நடவடிக்கைகளையும் பா.ம.க. எடுக்கும்'' என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.