Skip to main content

விசிக உயர்நிலைக் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

Published on 13/06/2019 | Edited on 14/06/2019

 


13.06.2019 அன்று பெரம்பலூரில் தொல்.திருமாவளவன்  தலைமையில் கூடிய விசிக உயர்மட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 

t

 

1. நன்றி அறிவிப்பு :  

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத அளவுக்கு வாக்குகளை அளித்து மகத்தான வெற்றியைத் தந்த தமிழ்நாட்டின் வாக்காளர்களுக்கு இந்த உயர்நிலைக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. இந்தியா முழுவதும் அடித்த பாஜக அலையைத் தடுத்து நிறுத்தி இது  சமூக நீதியின் மண் என்பதை  உணர்த்தியதோடு, தமக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை சீரழித்துவிடாமல் சனாதன சக்திகளைத்  தடுக்கவேண்டும் என்ற ஆணையையும் புதிய உறுப்பினர்களுக்குத் தமிழக மக்கள் வழங்கியுள்ளனர். விசிக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இதை மனதில்கொண்டு பணியாற்றுவார்கள் என இந்த உயர்நிலைக்குழு உறுதியளிக்கிறது.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஒடுக்கப்பட்ட மக்களை முகாமையாக அணிதிரட்டும் கட்சியொன்றின் இரண்டு உறுப்பினர்கள் மக்களவையில் இடம்பெறுவதற்கு உத்திகளை வகுத்துச் செயல்படுத்திய தலைவர் எழுச்சித் தமிழருக்கு இந்த உயர்நிலைக்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது. 


2. உள்ளாட்சித் தேர்தல் : 

2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்கவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை ஆளும் அதிமுக அரசு தோல்வி பயம் காரணமாகத் தொடர்ந்து தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறது. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தியும்கூட தேர்தல் நடத்தாமல் சாக்குபோக்குகளைக் கூறி வந்தது. இப்போது ஆகஸ்டு மாதத்தில் தேர்தல் நடத்தப்போவதாக ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். மீண்டும் கால நீட்டிப்புச் செய்யாமல் குறிப்பிட்ட மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். மாநகராட்சிகளில் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு இதுவரை ஆணை வெளியிடவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்கவேண்டும் என இந்த உயர்நிலைக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

 

3. திமுக தலைவருக்கு வேண்டுகோள்: 

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கக்கூடிய  ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும்; கல்வியைப் பெரும்பான்மை மக்களிடமிருந்து விலக்கி சனாதனவாதிகளின் எண்ணத்துக்கேற்ப மாற்றியமைத்திருக்கும் புதிய கல்விக் கொள்கையையும் மத்தியில் ஆளும் பாஜக அரசு நம் மீது திணித்துள்ள நிலையில் இந்த ஆபத்துகள் குறித்து மக்களிடம் பரப்புரை மேற்கொள்ளவும்,  போராட்டங்களைத் திட்டமிடவும்  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளைக் கூட்டுமாறு கூட்டணியின் தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த உயர்நிலைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. 

 

4. விருதுகள் வழங்கும் விழா:

விசிக சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் விருதுகள் வழங்கும் விழாவை ஜூலை 14 ஆம் நாள் சென்னையில் நடத்துவதென இந்த உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.