இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,281- லிருந்து 78,003 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,415- லிருந்து 2,549 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,386- லிருந்து 26,235 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வி.சி.க. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஊரடங்கு குறித்தும், கரோனா வைரஸ் பரவல் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், முழு அடைப்பால் இதுவரை ஏற்பட்டுள்ள பயன்கள் என்ன? பாதிப்புகள் என்ன? மேலும் முழு அடைப்பை நீட்டிப்பதற்கான தேவை என்ன? கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா? இல்லையா?எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் என்ன? மாநில அரசுகளுக்குச் செய்துள்ள உதவிகள், வழிகாட்டுதல்கள் என்ன? இந்தியாவிலேயே புலம்பெயரந்தவர்கள், அயல் நாடுகளில் சிக்கியிருப்பவர்கள் தொடர்பாக மாநில அரசுகள் செய்ய வேண்டியவை என்ன? அதற்கு மைய அரசு எடுத்துள்ள முயற்சிகள் என்ன? புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், சாலையோரங்களில் கிடப்போர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், அகதிகள் போன்றோரின் உயிர்ப் பாதுகாப்புக்கும் அவர்கள் கரோனாவிலிருந்து தப்பிப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? போன்றவைதானே பிரதமரின் உரையில் முதன்மையாக இடம்பெற்றிருக்க வேண்டும்,என்று கேள்வி எழுப்பியுள்ளார்.