Skip to main content

டெல்லி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தேச விரோதிகளா? விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேதனை!

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,166 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,965 லிருந்து 2,069 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 50 லிருந்து 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 151 லிருந்து 156 ஆனது. மேலும் டெல்லியில் உள்ள மேற்கு நிஜாமுதினில் இஸ்லாமிய சமூகத்தினர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற "தப்லிக் இ ஜமாத்" மாநாடு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிக்கு மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பலருக்குக் கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

vck



இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா அபாயத்தில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் திட்டமிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. வெறுப்பைப் பரப்பாதீர்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தப்லீக் ஜமாத் அமைப்பின் சார்பில், டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமே முன்வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதையடுத்து அம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தம்மை மருத்துவ பரிசோதனைக்கு இப்போது உட்படுத்திக் கொண்டுள்ளனர் என தமிழக மருத்துவத் துறையின் அரசு செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த மாநாடு சட்டவிரோதமாக நடத்தப்பட்டது அல்ல, வழக்கமாக நடத்தப்படும் ஒன்றுதான் என்பதை அதை நடத்திய தப்லீக் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்நிலையில் அதில் பங்கேற்றவர்கள் அனைவரையும் தேசவிரோதிகள் போல சித்திரித்தும், அவர்கள் ஏதோ கரோனாவைப் பரப்புவதற்காகவே அங்கு கலந்து கொண்டார்கள் என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஒருசில சமூகவிரோதிகள் ஏற்படுத்திவருகின்றனர். இதனை முன்வைத்து ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கும் எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

கரோனா தொற்று ஒருவரையொருவர் தொட்டால்தான் பரவும் என்று கூறப்படுகிறது. ஆனால், வெறுப்புப் பிரச்சாரம் பார்க்காமலேயே பரவக்கூடியது. எனவே, கரோனாவைவிட வெறுப்புப் பிரச்சாரம் மிகவும் ஆபத்தானது.

கரோனாவை எதிர்கொள்ள நாட்டு மக்கள் அனைவரும் மனிதநேயத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்களிடையே மதஉணர்வின் அடிப்படையில் வெறுப்பை விதைத்து பிரிவினையை ஏற்படுத்தும் இத்தகைய வெறுப்புப் பிரசாரங்களை கைவிடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்த இக்கட்டான சூழலிலும் மதம் சார்ந்த வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது, மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.