Skip to main content

"வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" - திருமாவளவன் அறிக்கை!

Published on 02/03/2021 | Edited on 03/03/2021

 

VCK condemns quota arrangement by goverment

 

"9.5% இட ஒதுக்கீட்டை இழப்பதன்மூலம் பாதியளவு வன்னியர்கள் பாதிக்கப் படமாட்டார்களா? மொத்தமாக எம்பிசி'க்கென 20% இருந்த இட ஒதுக்கீட்டில், ஏறத்தாழ 15% அளவில் பயன்பெற்று வந்த வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலையை இதன்மூலம் ஏற்படுத்தியுள்ளனர்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

“உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல்திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் பாஜகவும் அதன் முழு கட்டுப்பாட்டில் சிக்கி உழலும் அதிமுகவும் தற்போது தமிழகத்தில் கூட்டாக சதித்திட்டம் தீட்டி, தேர்தல் அரசியலில் சாதிக் காய்களை நகர்த்தி வருகின்றன. அதாவது, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் பிடியில் கட்டுண்டு அவர்களின் இழுப்புக்கேற்ப ஆட்டம் போடும் அதிமுக அரசு, தமிழகத்தில் உள்ஒதுக்கீடு என்னும் பெயரால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலுள்ள விளிம்பு நிலை சமூகங்களைக் கூறுபோட்டுச் சட்டம் ஒன்றை இயற்றியிருப்பது அதன் வெளிப்பாடுதான் ‘எம்பிசி’ சமூகங்களின் இட ஒதுக்கீட்டு நலன்களை நீர்த்துப்போகச் செய்யும் இந்தக் கூட்டுச் சதியை வன்னியர்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அறியாதவர்கள் அல்ல.

 

எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அவர்கள் அதிமுக-பாஜக- பாமக கூட்டணியினருக்கு உரிய பாடத்தைப் புகட்டுவார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களான வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீதம் உள்ஒதுக்கீடு வேண்டும் என்று திடீரென பாமக கோரிக்கை எழுப்பியது. அதிமுக கூட்டணியில் அக்கட்சி இருப்பதால் தேர்தல் பேரத்துக்கென அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தது. அதனடிப்படையில், அதிமுக அரசு கடந்த 2020 டிசம்பர் 07 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. “தற்போதைய நிலவரத்தின்படி சாதி வாரியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து, அந்த ஆணையம் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்” என அதிமுக அரசு கூறியது. 

 

ஏற்கனவே அமைக்கப்பட்ட ஏ.என்.சட்டநாதன், ஜே.ஏ.அம்பாசங்கர் ஆகியோர் தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் நலன்களுக்குரிய ஆணையங்கள் முன்வைத்த புள்ளிவிவரங்கள் காலாவதி ஆகிவிட்ட நிலையில், புதிய புள்ளி விவரங்களை நீதிபதி குலசேகரன் ஆணையம் சேகரிக்கும் என்றும், ஆறு மாதங்களுக்குள் அது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் அதிமுக அரசு அறிவித்தது.  அந்த ஆணையம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களைக்கூட எட்டாத நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, உள்ஒதுக்கீடு சட்டமசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது அதிமுக அரசு. அதாவது, வன்னியர் உள்ளிட்ட 7 பிரிவுகளை உள்ளடக்கி 'வன்னியகுல சத்ரியா' என்ற பெயரில் அச்சமூகத்தினருக்கு 10.5 சதவீதமும், மீதமுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளான பரவர், மீனவர், வேட்டுவ கவுண்டர் உள்ளிட்ட 25 சாதிகள் மற்றும் சீர்மரபினர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

 

ஆப்பநாட்டு மறவர், கள்ளர், பிரன்மலைக்கள்ளர் முதலிய 68 சாதிகள் உட்பட மொத்தம் 93 சாதிகளுக்கு 7 சதவீதமும்; எஞ்சியுள்ள இசைவேளாளர் உள்ளிட்ட 26 சாதிகளுக்கு 2.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதாவைத் தாக்கல் செய்து எந்தவொரு விவாதமும் இன்றி நிறைவேற்றியுள்ளனர். இடஒதுக்கீடு என்பது சமூகநீதி என்கிறபோது, உள்ஒதுக்கீடு என்பதும் சமூகநீதியின் மிகவும் குறிப்பான, நுட்பமான பரிமாணமே ஆகும். அதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பாமக, அதிமுக, மற்றும் பாஜக ஆகியவை எந்த அடிப்படையில் இதனை அணுகுகின்றன என்பதே முதன்மையானது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் கடத்திய தமிழக ஆளுநர், இந்தச் சட்டத்துக்கு ஒரே நாளில் ஒப்புதல் வழங்கி இருக்கின்றார். எம்பிசி சமூகங்களைப் பிளவுப்படுத்தி, இடைவெளியைப் பெருக்கி, எம்பிசி ஒற்றுமையைச் சிதைக்கும் உள்நோக்கத்துடன் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகியவை தற்காலிகமான தேர்தல் ஆதாயத்துக்காகவே கூட்டு சேர்ந்து இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதற்கு இதுவே ஆதாரமாக இருக்கிறது. 

 

உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் மக்கள்தொகை தொடர்பான முழு தரவுகளின் அடிப்படையிலேயே அதைக் கொடுக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழலில் அத்தகைய எந்தத் தரவும் இல்லாதநிலையில் உள் ஒதுக்கீடு வழங்கினால், அது சட்டப்படி செல்லாததாகிவிடும். இந்தச் சட்டத்துக்கு எதிராகப் பாதிக்கப்படும் எம்பிசி பிரிவினரில் யாரேனும் நீதிமன்றம் சென்றால், இதற்குத் தடை விதிக்கப்படும் என்பது உறுதி. இந்த உண்மை பாஜக, பாமக மற்றும் அதிமுக ஆட்சியாளர்களுக்கும் தெரியும். ஆனால், இந்தச் செல்லுபடியாகாத ஓட்டைச் சட்டத்தைக் காட்டி வன்னிய மக்களின் வாக்குகளை வாரிக் கொள்ளலாம் என அவர்கள் கனவு காண்கிறார்கள். இவர்களின் இந்த வஞ்சக சூழ்ச்சிக்கு உழைக்கும் வன்னியர் சமூகமக்கள் பலியாக மாட்டார்கள். இருபது விழுக்காடு கேட்டவர்கள் தற்போது எதனடிப்படையில் 1931இல் எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ள 10.5 விழுக்காட்டுக்கு ஒப்புக்கொண்டனர்? பாதிக்குப் பாதியை இழப்பதற்கு அவர்கள் எப்படி உடன்பட்டனர்? அவர்கள் சொன்ன 20 விழுக்காடு என்னும் புள்ளிவிவரம் பொய்யா? அல்லது வன்னியர்களின் ஓட்டுக்காக மட்டுமே அவர்கள் நடத்துகிற நாடகமா?.

 

9.5% இட ஒதுக்கீட்டை இழப்பதன்மூலம் பாதியளவு வன்னியர்கள் பாதிக்கப் படமாட்டார்களா? மொத்தமாக எம்பிசி'க்கென 20% இருந்த இட ஒதுக்கீட்டில், ஏறத்தாழ 15% அளவில் பயன்பெற்று வந்த வன்னியர்கள் இனி 10.5% மேல் பயன்பெறவே முடியாத நிலையை இதன்மூலம் ஏற்படுத்தியுள்ளனர். இதனை வன்னியர் சமூகமக்கள் உணராதவர்கள் அல்ல.  அடுத்து, வன்னியர் சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குகிறோம் என்ற பெயரில், அத்தகைய கோரிக்கையையே எழுப்பாத பிற சமூகத்தினரையும் பிரித்து கூறு போட்டிருக்கிறது அதிமுக அரசு. வன்னியரல்லாத பிற சமூகங்களைச் சார்ந்தவர்களில் யாராவது உள்ஒதுக்கீடு கேட்டனரா? போராட்டங்களை நடத்தினரா? அவர்களை ஏன் பிளவுபடுத்த வேண்டும்? 93 சாதிகளை ஒரு கூறாகவும் ( 7% ) 26 சாதிகளைக் மற்றொரு கூறாகவும் (2.5%) இரண்டு வகையினராகக் கூறு போட்டது ஏன்? இதனால் அந்தச் சமூகங்களைச் சார்ந்தவர்கள் தமக்கான உரிமைகளைப் பாதுகாக்கும் அறப்போராட்டத்தில் இறங்கும்படி தள்ளப்பட்டுள்ளனர்.

 

இதனால் 'எம்பிசி' மக்களின் ஒற்றுமையும் அவர்களின் பேர வலிமையும் வெகுவாகக் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரின் ஒற்றுமையைச் சீர்குலைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டும் பாஜகவின் சனாதன சதி திட்டத்தைத்தான் அதிமுக அரசும் பாமகவும் இப்போது நிறைவேற்ற உள்ளன. இதனை நன்குணர்ந்துள்ள வன்னியர்சமூக மக்களும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்தத் தேர்தலில் பாஜக- அதிமுக- பாமக கூட்டணியைப் படுதோல்வி அடைய செய்வார்கள். அதன் மூலம் உரிய பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.