Skip to main content

விசிக பிரமுகர் கொலை; 6 பேர் கைது; காவல்துறை தீவிர விசாரணை

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

vck Administrator case; 6 arrested; Police are actively investigating

 

சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். 40 வயதான இவர் மீது சுற்றியுள்ள காவல்நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சென்னை காவல்துறையால் ஏ பிரிவு ரவுடியாக பதிவு செய்யப்பட்டவர். திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

 

விருகம்பாக்கம் தொகுதி விசிக அமைப்பாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது பகுதியில் டீ குடிக்கச் சென்ற அவரை காரில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரமேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். 

 

மேலும் கொலை செய்யப்பட்டதன் காரணம் முன் விரோத நடவடிக்கையாக இருக்கலாமா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். காவல்துறையின் விசாரணையில் ரமேஷை கொலை செய்தவர்களில் ஒருவர் அவரது பழைய நண்பர் ராகேஷ் என்பது தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட பகை மற்றும் தொழில் பகையின் காரணமாக ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். 

 

ரமேஷ் நண்பரான 34 வயதான ராகேஷ், தனசேகரன் (42), தினேஷ் ராஜன் (24), உதயகுமார் (39), மோகன்ராஜ் (37), செந்தில் குமார் (30) ஆகிய 6 பேர் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் பூமாறன் முன்னிலையில் சரணடைந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தி.நகர் துணை ஆணையர் அருண் கபிலன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டனர். ஆறு பேரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்