Skip to main content

வன்னியர் அமைப்பு நிகழ்ச்சிக்குள் புகுந்த அரசியல்! ரத்தான ஊக்கத்தொகை விழா! 

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

Vanniyar sangam program canceled

 

திருவண்ணாமலை மாவட்டம், வன்னியர்குல ஷத்திரிய மடாலய சத்திரியர் சங்கத்துக்கு என திருவண்ணாமலை நகரில் இரண்டு திருமண மண்டபங்கள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. இந்த மடாலயத்தின் தலைவராக திமுக மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் எம்.பி வேணுகோபால் உள்ளார்.

 

இந்த மடாலய சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் தொகுதிகளில் அரசு பள்ளியில் பயிலும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை ஆற்ற திமுக தெற்கு மா.செ, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வாழ்த்துரை துணைசபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. சங்கத்தினர் இதற்கான அழைப்பிதழ் நோட்டீஸை மாவட்டம் முழுவதும் அனுப்பினர். இந்த நோட்டீஸ் பார்த்துவிட்டு சமூக ஊடகங்களில் கடந்த 3 நாட்களாக மடாலயத்தலைவர் வேணுகோபால் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

 

வன்னியர் சமுதாய நிகழ்ச்சிக்கு மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எ.வ. வேலு, பிச்சாண்டியை எப்படி அழைக்கலாம். திமுகவில் வன்னிய பிரமுகர்களே இல்லையா? அல்லது கட்சியை கடந்து வன்னிய பிரமுகர்கள் இல்லையா? பிற சமுதாய சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வன்னியர் தலைவர்களை, பிரமுகர்களை அழைத்துதான் நடத்துகிறார்களா என சமூக ஊடகங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.

 

வன்னியர் மடாலய சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு கலந்துகொண்டால் அவருக்கு எதிராக வன்னியர் சங்கம், பாமக போன்றவை கறுப்புக்கொடி காட்டுவோம், நிகழ்ச்சி நடைபெறும் மடத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம் என மா.செக்கள் பக்தவச்சலம், நாராயணன் நம்மிடம் தெரிவித்தனர். நகரம் முழுவதும் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.

 

இந்நிலையில் வன்னியர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இரண்டுபக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், வன்னியர் சமுதாயத்துக்காக அமைச்சர் கல்வி வள்ளல் எ.வ. வேலு, எவ்வளவோ வேலைகளை செய்துள்ளார்கள். அவரை தூற்றுவது என்பது சரியானதல்ல. தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூட்டாக சென்றுதான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்தோம். அவரும் வர இசைவு தெரிவித்திருந்தார். தற்போது இதனை அரசியலாக்கி அவதூறு கருத்துக்களை திட்டமிட்டு நம் மக்களிடையே வெளியிட்டு வருவது பெரும் வேதனைக்குரியது. சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கவும், சமுதாய மக்களின் வளர்ச்சியைக் கெடுக்கவும் துணிந்த இந்த துரோகிகளின் செயல் வெட்கக்கேடானதாகும். மாநிலம் முழுவதும் பயணம் செய்யும் அமைச்சர், வரும் 27 ஆம் தேதி முதலமைச்சருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் மடாலய நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

வன்னிய சகோதரர்களின் பலரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உறுதுணையாக வழிகாட்டியாக இருந்து சமுதாய வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை செய்துவரும் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வன்னிய மக்களோடு இரண்டற கலந்துவிட்டவருக்கு சமுதாய மக்கள் என்றென்றும் துணை நிற்போம் என தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

மடாலயம் சம்பந்தமாக சேலத்திலிருந்து பாமகவை சேர்ந்த ஒருவர் அமைச்சர் எ.வ. வேலுவை விமர்சித்து சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், பாமகவில் இருந்து திமுகவிற்கு வந்தவருமான எதிரொலிமணியன் பதிலடி பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதுவும் தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

 

இந்நிலையில் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், மடாலய பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்