Skip to main content

மனிதநேயமும், சகோதரத்துவமும் தழைக்க நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும் - வைகோ

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

மக்களவை தேர்தலில்  புதுச்சேரியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தையும்,  தட்டாஞ்சாவடி சட்டமன்ற  தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து புதுச்சேரியிலும், கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷை ஆதரித்து கடலூர் மாவட்டத்திலும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; 

 

vaiko election campaign pondicherry

 

பாசிச போக்குடன் ஜனநாயகத்தை நடத்தி வருகின்றது மோடி அரசு. இந்திய நாட்டில் ஜனநாயகம் நீடிக்குமா? அல்லது பாசிசம் நீடிக்குமா என்ற கேள்வி தற்போதைய மக்களவை தேர்தலில் எழுந்துள்ளது. 
 

புதுச்சேரியில் ஜனநாயக படுகொலை செய்ய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க மூலம் மூன்று பேரை துணைநிலை ஆளுநர் நியமித்ததை மக்கள் அனைவரும் அறிவர். மாநில அந்தஸ்து இல்லாததால் 25% நிதி மட்டுமே அளிக்கப்படுகின்றது.
 

தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். பிரதமர் மோடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்றார். ஆனால், 2 ஆயிரம் பேருக்கு கூட வேலை வழங்கவில்லை. அதேபோல் அனைவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்றார். ஆனால் வங்கியில் குறைந்த பட்ச இருப்பு தொகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு ரூ.10 ஆயிரத்து 361 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக பன்னாட்டு கம்பெனிகள் வந்தபோது கமிஷன் கேட்டதால் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். ஆக வேலையில்லா திண்டாட்டத்துக்கு இந்த அரசு ஒரு காரணம்.
 

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டினால் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் பாழாகும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் குடிநீர் இல்லாமல் போகும், வீராணம் ஏரி வறண்டுபோய்விடும். மனிதநேயமும் சகோதரத்துவமும் தழைக்க நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.