Skip to main content

கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தார்களே அனுதாப வார்த்தைகளாவது சொன்னீர்களா - வைகோ

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்  ராமலிங்கத்தை ஆதரித்து ம.தி.மு.க.வின் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. 

 

vaiko

 

கூட்டத்தில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட திமுக, மதிமுக மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அங்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து வைகோ பேசினார்.
 

"நாட்டிற்கு பேராபத்து  வந்திருக்கும் சூழலில் பாராளுமன்ற தேர்தலை நாம் சந்தித்துவருகிறோம். ஆபத்து வெளியிடங்களில் இருந்து வரவில்லை, வெளிநாடுகளில் இருந்து வரவில்லை, இந்துத்துவா அமைப்புகளின் சார்பில் அவர்களது கோரகுரலாக நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் வந்திருக்கிறது. 
 

 பிரதமர் மோடி இந்துத்துவா சக்திகளை விமர்சனம் செய்வதை அப்படியே திரித்து மாற்றி இந்துக்களை எதிர்க்கிறார்கள் என்று  மாற்றி சொல்லி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்.
 

 இந்துத்துவா வன்முறையில் ஈடுபட்டதுண்டா என்று கேட்கிறீர்களே மறந்துவிட்டீர்களா கோட்சேவால் காந்தியைக் சுட்டுக் கொண்றீர்களே மறந்துவிட முடியுமா?  இரண்டு மாதங்களுக்கு முன்பு அலிகரில் காந்தியின் பொம்மையில்  துப்பாக்கியால் சுட்டு ரத்தம் கசிவது போல்  காட்சியமைத்தீர்களே மறந்துவிடமுடியுமா? அந்த கொலைகார கோட்சேவுக்கு நாடு முழுவதும் சிலைவைப்போம் என்று  இந்துத்துவா சக்திகள் சொல்வது நெஞ்சை பதற வைக்கிறது. 

 

இதற்கெல்லாம் சாதாரன கண்டனம்கூட தெரிவிக்காத  பிரதமர் மோடி, பிரதமர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் தகுதியை அடியோடு இழந்துவிட்டார்.
 

மேகதாதுவில் அணை கட்டினால் மேட்டூர் முதல் கல்லணை வரை எங்கும் தண்ணீர் வராது, இதனால் தமிழகமே பட்டினி பிரதேசமாக மாறிவிடும். 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்து பாலைவனமாக மாறும், பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கை எரிவாயுக்களை எடுத்து பல்லாயிரக்கணக்கான கோடிகளை அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானம் ஈட்டக்கூடிய திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.
 

மோடி அவர்களே, கஜா புயலில் 89 தமிழர்கள் உயிரிழந்தார்கள் அனுதாப வார்த்தைகள் சொன்னீர்களா,  உலக நாடுகளுக்கெல்லாம் சென்று வந்த பிரதமர் ஒப்புக்காவது வந்து பார்த்தீர்களா, விவசாய கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய மாட்டீர்கள். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ 5 லட்சம் கோடி வரிச்சலுகை, ரூ 2 லட்சத்து 45 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி  விஜய் மல்லையா ரூ 9 ஆயிரம் கோடி, நீரவ் மோடி ரூ 13 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து தப்பி செல்ல வழி வகுத்திருக்கிறீர்களே.
 

விக்ரம் கோத்தாரி  ரூ 3850 கோடி மோசடி செய்து ஓடிப்போனார், ஆந்திராவில் நிக்கில் சுரேஷா மூன்று வங்கிகளில் ரூ 2500 கோடி மோசடி செய்து வெளியேறினார். இதற்க்கு எல்லாம் காரணம் கார்ப்ரேட் முதலாளிகளின் ஆதரவாளரான பிரதமர் மோடிதானே காரணம்.

 


நரேந்திர மோடி, அமித்ஷா பெயரை சொன்னாலே தமிழக  அரசு நடுங்கி ஒடுங்கி விடுகிறது. இதற்கு காரணம் பருப்பு,  ஆம்னி பஸ் ஊழல், கல்வித் துறை, பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறைகளில் ஊழல், துணைவேந்தர் நியமனத்தில் ஊழல், அனைத்து துறைகளிலும் ஊழல் செய்த அமைச்சர்கள் வீடுகளில் வருமானவரித்துறை மூலம் ரெய்டு நடைபெற்றது, நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் இதற்கு என்ன பதில் என்று இதுவரை கூற முடியவில்லை.
 

தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள் தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக வந்த போர்டு நிறுவனத்திடம் அதிமுக அரசு கமிஷன் அதிகம் கேட்டதால் குஜராத்துக்கும், வேறுமாநிலத்திற்கும் சென்றுவிட்டனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் சித்தூருக்கு சென்றுவிட்டது.

 

கியா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ  7 ஆயிரத்து 950 கோடி முதலீட்டில் தொடங்க வந்த நிறுவனம் இவர்கள் கேட்ட கமிஷன் தொகையால்  அவர்கள் போட்ட முதலீட்டுத் தொகையை விட பெருந்தொகை என கூறி அனந்தபூர் சென்றுவிட்டது.  
 


தமிழகத்தில் நடைபெற்ற  ஓசூர் தர்மபுரி ஆகிய பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தி உயிர் இழப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் ஆளும் கட்சி பிரமுகரின் பிள்ளைகள் நடத்திய பாலியல் வன்முறையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே மூடி மறைத்ததால் 200 பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது.  

 

தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில்  அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள், இது தமிழக அரசு  காவல்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கூலிப்படையினர் போல்  திட்டமிட்ட படுகொலை.  

 

முப்படை ராணுவ வீரர்கள் எங்கள் காவல் தெய்வங்கள் எந்தக் கட்சிக்கும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆணி செய்வதற்கு கூட அனுபவம் இல்லாத அம்பானி நிறுவனம் ரபேலில் அனுமதி பெற்றது.


தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை ரிமோட் கண்ட்ரோல் மத்திய அரசு  இயக்கப்பட்டு வருகிறது என ஓய்வு பெற்ற நீதிபதிகள் குற்றசாட்டிவருகின்றனர். மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு வருகிறோம். மத்திய, மாநில ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டும்.
 

காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து செய்து, மாநில கல்வி பட்டய பட்டியலுக்கு கொண்டு செல்வோம் என பல்வேறு மக்கள் நலம் சார்ந்த  திட்டங்களை இடம் பெற செய்ததை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று மழை அடித்து ஓய்ந்தது போல் பேசிமுடித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர்.