Skip to main content

அமைச்சரை யாராவது பார்த்தீர்களா? அரசாங்கம் வட்டி வசூல் நிறுவனமா நடத்துகிறது? கொடூரர்களின் கைகளில் ஆட்சி... செந்தில்பாலாஜி தாக்கு!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

senthil balaji

 

 

மின் கட்டணமா? பகல் கொள்ளையா? - எங்கே போனார் மின்சாரத்துறை அமைச்சர்? என்கிற பெரிய கண்டன அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தி.மு.கழக கரூர் மாவட்டப் பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.

 

அந்த அறிக்கையில், ''நூறு நாட்களைத் தாண்டி விட்ட ஊரடங்கினால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் அத்தனையும் முடங்கிக் கிடக்கிறது. உள்ளூருக்குள் சிறு தொழில் நடத்தி நான்கைந்து பேர்களுக்கு வேலையும் கொடுத்து, தாமும் ஓரளவுக்குச் சம்பாதித்து கெளரவமாக வாழ்ந்தவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். எப்பொழுது விடியும் என்று தெரியாமல் கதறுகிறார்கள்.

 

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையின் வரி ஏற்றி, ஓடாத நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் வசூலித்து என இருப்பதையெல்லாம் வழிப்பறி செய்து திணற அடிக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூன் 5 ஆம் தேதியன்றே மின் கட்டணம் என்ற பாறாங்கல்லைத் தலையில் தூக்கி வைத்து- அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அதிமுக அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

இந்த அரசாங்கத்துக்குத்தான் சொல் புத்தியும் கிடையாது சுயபுத்தியும் கிடையாதே!  மு.க.ஸ்டாலின் இதுவரைக்கும் ஆலோசனைகளுக்கு மட்டுமே ஐம்பது அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். செவிடன் காதில் ஊதிய சங்காக கலெக்‌ஷன் - கமிஷன் - கரப்ஷன் என்று கணக்குப் போட்டு, அந்திமக் காலத்தில் வாரிச்சுருட்டுவதிலும், வெட்டி விளம்பரத்திலும் கவனமாக இருக்கும் முதலமைச்சர் ‘என்ன ஆலோசனை சொன்னார் மு.க.ஸ்டாலின்’ என்று இப்பொழுது கேட்கிறார்.

 

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டிவிட்டது. தினசரி இறக்கிறவர்களின் சராசரி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. முதலமைச்சரின் பி.ஏவே கரோனாவால் இறந்து போனார். அமைச்சர், எம்.எல்.ஏக்கள் என புதிய தொற்றாளர்கள் குறித்த செய்தி வந்து கொண்டேயிருக்கிறது. எதைப்பற்றியாவது துளியாவது சிந்திக்கிறாரா முதலமைச்சர்? அவருக்கு என்ன சொகுசான வாழ்க்கை. சேலத்துக்கும்-சென்னைக்கும் வண்டி ஓட்ட ட்ரைவர், பாதுகாப்புக்கு போலீஸ், பெட்டியை நிரப்ப வசூல் என்று ‘விபரீத ராஜ வாழ்க்கை’ வாழும் முதலமைச்சரும் அவரது சகாக்களும் மக்களைப் பற்றி எதையாவது நினைக்கிறார்களா?

 

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை யாராவது பார்த்தீர்களா என்று விசாரிக்க வேண்டியிருக்கிறது. குமாரபாளையத்தில் ஆழக் குழிதோண்டி உள்ளே பதுங்கியிருக்கிறார் போலும்.

 

tneb

 

மின்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அல்லவா நடக்கிறது? எப்பொழுதும் இல்லாத அளவில் ஒவ்வொரு வீட்டிலும் மின்கட்டணம் வந்திருக்கிறது. எங்கள் மாவட்டமான கரூர் செல்லாணடிபாளையத்தில் ஒரு விவசாயிக்கு 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பில்லாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் வெறும் ஐம்பது ரூபாய் கட்டிய விவசாயி அவர். நூறு யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்குப் பிறகு மின் கட்டணமே கட்டாத விவசாயிக்கு லட்சத்தில் பில். இது ஒரு சோற்றுப்பதம்தான். மின்கட்டணம் செலுத்துகிற அத்தனை பேருமே ‘எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு பில்’ என்று கூக்குரல் போடுவது காதில் விழவில்லையா?

 

ஐயா, மின் துறை அமைச்சரே, டாஸ்மாக் மட்டும்தான் உங்கள் துறையா? மின்சாரத்துறைக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையா? தொழிலே நடக்காத போது மின்கட்டணம் செலுத்தச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? வட்டிக்கு கடன் வாங்கி, அசலையும் கட்ட முடியாமல், வட்டிக்கும் வழியில்லாமல், சோற்றுக்கே பஞ்சம் வரும் நிலையில் இருப்பவர்களிடம் மின் கட்டணத்தைக் கட்டச் சொல்லிக் கேட்பதில் என்ன நியாயம்? உங்களுக்கெல்லாம் கருணை இல்லையா?

 

ஊர் ஊராக, தெருத்தெருவாக வாக்குக் கேட்டுச் சென்றவர்கள்தானே நாம்? இன்றைக்கு அந்த மக்கள் எல்லாம் அழுகுரல் எழுப்புவது காதில் விழவில்லையா? குமாரபாளையத்திலேயே விசாரியுங்கள். வெளியில் செல்ல பயமாக இருந்தால் ஃபோனில் கேட்டுப்பாருங்கள். தறிக்குடோன் தொடங்கி பட்டறை வரைக்கும் விசாரியுங்கள். மூன்று ஷிப்ட் ஓடிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு ஷிப்டும் அரை ஷிப்டுமாக ஓடி, பாதித் தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் எனச் சொல்லி, சந்தையிலும் விலை இல்லாமல்- எவ்வளவு துன்பங்கள் அவர்களுக்கு? ஏதாவது தெரியுமா உங்களுக்கு? நிவாரணம் என்று எதை வழங்கினீர்கள்?

 

அந்நிய தேசங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தையே அரசாங்கம் கொடுக்கிறது. அதையெல்லாம் செய்ய வேண்டாம். மின்கட்டணம் செலுத்த ஜூலை இறுதி வரை அவகாசம் கேட்டால், அத்தனை சதவீதம் பேர் கட்டிவிட்டார்கள், இத்தனை சதவீதம் பேர் கட்டவில்லை என்று நீதிமன்றத்தில் புள்ளி விவரக் கணக்குச் சொல்கிறார் அரசு வழக்கறிஞர். நியாயமாகப் பார்த்தால் அரசாங்கம் மின்கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்து மக்களையும், தொழில் முனைவோரையும் காத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. ‘இத்தனை பேர் கட்டிவிட்டார்கள்’ என்று சொல்கிற அரசாங்கத்திடம் கட்டியவர்களில் எத்தனை பேர்கள் சிரமப்பட்டுக் கட்டினார்கள் என்ற தகவல் உண்டா? எத்தனை பேர் கடன் வாங்கிக் கட்டினார்கள் என்று தெரியுமா? ‘நீ எப்படிக் கட்டினால் என்ன? எனக்கு பணம் வந்துடுச்சு’ என்று பேசும் அரசாங்கம் வட்டி வசூல் நிறுவனமா நடத்துகிறது?  அவகாசம் கேட்பதும் கூட கட்ட முடியாதவர்களை மனதில் வைத்துத்தானே? அவர்களுக்கு சலுகை எதுவும் கொடுக்க முடியாது என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

 

http://onelink.to/nknapp

 

இதயத்தில் துளி ஈரமும் இல்லாத, சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் மோசமான கொடூரர்களின் கைகளில் ஆட்சி சிக்கியிருக்கிறது. அழுகிறவர்களுக்கும்,  வேதனைகளைப்  பகிர்கிறவர்களுக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்கிறேன். இன்னமும் பத்து மாதங்களில் தேர்தல் வரும். மக்களின் கவலையை யோசிக்காதவர்கள் மக்களாலேயே தூக்கி எறியப்படுவார்கள். அப்பொழுது அரிதாரம் பூசிக் கொண்டு சுற்றுகிறவர்களை சீந்த நாதி இருக்காது. திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் ஆட்சி மலரும். தமிழகம் துன்பங்களிலிருந்து விடுதலையாகி தலை நிமிரும். காத்திரு தமிழகமே!''  என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்