Skip to main content

அமைச்சரை யாராவது பார்த்தீர்களா? அரசாங்கம் வட்டி வசூல் நிறுவனமா நடத்துகிறது? கொடூரர்களின் கைகளில் ஆட்சி... செந்தில்பாலாஜி தாக்கு!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

senthil balaji

 

 

மின் கட்டணமா? பகல் கொள்ளையா? - எங்கே போனார் மின்சாரத்துறை அமைச்சர்? என்கிற பெரிய கண்டன அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தி.மு.கழக கரூர் மாவட்டப் பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.

 

அந்த அறிக்கையில், ''நூறு நாட்களைத் தாண்டி விட்ட ஊரடங்கினால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் அத்தனையும் முடங்கிக் கிடக்கிறது. உள்ளூருக்குள் சிறு தொழில் நடத்தி நான்கைந்து பேர்களுக்கு வேலையும் கொடுத்து, தாமும் ஓரளவுக்குச் சம்பாதித்து கெளரவமாக வாழ்ந்தவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். எப்பொழுது விடியும் என்று தெரியாமல் கதறுகிறார்கள்.

 

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையின் வரி ஏற்றி, ஓடாத நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் வசூலித்து என இருப்பதையெல்லாம் வழிப்பறி செய்து திணற அடிக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூன் 5 ஆம் தேதியன்றே மின் கட்டணம் என்ற பாறாங்கல்லைத் தலையில் தூக்கி வைத்து- அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அதிமுக அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

இந்த அரசாங்கத்துக்குத்தான் சொல் புத்தியும் கிடையாது சுயபுத்தியும் கிடையாதே!  மு.க.ஸ்டாலின் இதுவரைக்கும் ஆலோசனைகளுக்கு மட்டுமே ஐம்பது அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். செவிடன் காதில் ஊதிய சங்காக கலெக்‌ஷன் - கமிஷன் - கரப்ஷன் என்று கணக்குப் போட்டு, அந்திமக் காலத்தில் வாரிச்சுருட்டுவதிலும், வெட்டி விளம்பரத்திலும் கவனமாக இருக்கும் முதலமைச்சர் ‘என்ன ஆலோசனை சொன்னார் மு.க.ஸ்டாலின்’ என்று இப்பொழுது கேட்கிறார்.

 

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டிவிட்டது. தினசரி இறக்கிறவர்களின் சராசரி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. முதலமைச்சரின் பி.ஏவே கரோனாவால் இறந்து போனார். அமைச்சர், எம்.எல்.ஏக்கள் என புதிய தொற்றாளர்கள் குறித்த செய்தி வந்து கொண்டேயிருக்கிறது. எதைப்பற்றியாவது துளியாவது சிந்திக்கிறாரா முதலமைச்சர்? அவருக்கு என்ன சொகுசான வாழ்க்கை. சேலத்துக்கும்-சென்னைக்கும் வண்டி ஓட்ட ட்ரைவர், பாதுகாப்புக்கு போலீஸ், பெட்டியை நிரப்ப வசூல் என்று ‘விபரீத ராஜ வாழ்க்கை’ வாழும் முதலமைச்சரும் அவரது சகாக்களும் மக்களைப் பற்றி எதையாவது நினைக்கிறார்களா?

 

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை யாராவது பார்த்தீர்களா என்று விசாரிக்க வேண்டியிருக்கிறது. குமாரபாளையத்தில் ஆழக் குழிதோண்டி உள்ளே பதுங்கியிருக்கிறார் போலும்.

 

tneb

 

மின்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அல்லவா நடக்கிறது? எப்பொழுதும் இல்லாத அளவில் ஒவ்வொரு வீட்டிலும் மின்கட்டணம் வந்திருக்கிறது. எங்கள் மாவட்டமான கரூர் செல்லாணடிபாளையத்தில் ஒரு விவசாயிக்கு 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பில்லாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் வெறும் ஐம்பது ரூபாய் கட்டிய விவசாயி அவர். நூறு யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்குப் பிறகு மின் கட்டணமே கட்டாத விவசாயிக்கு லட்சத்தில் பில். இது ஒரு சோற்றுப்பதம்தான். மின்கட்டணம் செலுத்துகிற அத்தனை பேருமே ‘எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு பில்’ என்று கூக்குரல் போடுவது காதில் விழவில்லையா?

 

ஐயா, மின் துறை அமைச்சரே, டாஸ்மாக் மட்டும்தான் உங்கள் துறையா? மின்சாரத்துறைக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையா? தொழிலே நடக்காத போது மின்கட்டணம் செலுத்தச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? வட்டிக்கு கடன் வாங்கி, அசலையும் கட்ட முடியாமல், வட்டிக்கும் வழியில்லாமல், சோற்றுக்கே பஞ்சம் வரும் நிலையில் இருப்பவர்களிடம் மின் கட்டணத்தைக் கட்டச் சொல்லிக் கேட்பதில் என்ன நியாயம்? உங்களுக்கெல்லாம் கருணை இல்லையா?

 

ஊர் ஊராக, தெருத்தெருவாக வாக்குக் கேட்டுச் சென்றவர்கள்தானே நாம்? இன்றைக்கு அந்த மக்கள் எல்லாம் அழுகுரல் எழுப்புவது காதில் விழவில்லையா? குமாரபாளையத்திலேயே விசாரியுங்கள். வெளியில் செல்ல பயமாக இருந்தால் ஃபோனில் கேட்டுப்பாருங்கள். தறிக்குடோன் தொடங்கி பட்டறை வரைக்கும் விசாரியுங்கள். மூன்று ஷிப்ட் ஓடிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு ஷிப்டும் அரை ஷிப்டுமாக ஓடி, பாதித் தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் எனச் சொல்லி, சந்தையிலும் விலை இல்லாமல்- எவ்வளவு துன்பங்கள் அவர்களுக்கு? ஏதாவது தெரியுமா உங்களுக்கு? நிவாரணம் என்று எதை வழங்கினீர்கள்?

 

அந்நிய தேசங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தையே அரசாங்கம் கொடுக்கிறது. அதையெல்லாம் செய்ய வேண்டாம். மின்கட்டணம் செலுத்த ஜூலை இறுதி வரை அவகாசம் கேட்டால், அத்தனை சதவீதம் பேர் கட்டிவிட்டார்கள், இத்தனை சதவீதம் பேர் கட்டவில்லை என்று நீதிமன்றத்தில் புள்ளி விவரக் கணக்குச் சொல்கிறார் அரசு வழக்கறிஞர். நியாயமாகப் பார்த்தால் அரசாங்கம் மின்கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்து மக்களையும், தொழில் முனைவோரையும் காத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. ‘இத்தனை பேர் கட்டிவிட்டார்கள்’ என்று சொல்கிற அரசாங்கத்திடம் கட்டியவர்களில் எத்தனை பேர்கள் சிரமப்பட்டுக் கட்டினார்கள் என்ற தகவல் உண்டா? எத்தனை பேர் கடன் வாங்கிக் கட்டினார்கள் என்று தெரியுமா? ‘நீ எப்படிக் கட்டினால் என்ன? எனக்கு பணம் வந்துடுச்சு’ என்று பேசும் அரசாங்கம் வட்டி வசூல் நிறுவனமா நடத்துகிறது?  அவகாசம் கேட்பதும் கூட கட்ட முடியாதவர்களை மனதில் வைத்துத்தானே? அவர்களுக்கு சலுகை எதுவும் கொடுக்க முடியாது என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

 

http://onelink.to/nknapp

 

இதயத்தில் துளி ஈரமும் இல்லாத, சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் மோசமான கொடூரர்களின் கைகளில் ஆட்சி சிக்கியிருக்கிறது. அழுகிறவர்களுக்கும்,  வேதனைகளைப்  பகிர்கிறவர்களுக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்கிறேன். இன்னமும் பத்து மாதங்களில் தேர்தல் வரும். மக்களின் கவலையை யோசிக்காதவர்கள் மக்களாலேயே தூக்கி எறியப்படுவார்கள். அப்பொழுது அரிதாரம் பூசிக் கொண்டு சுற்றுகிறவர்களை சீந்த நாதி இருக்காது. திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் ஆட்சி மலரும். தமிழகம் துன்பங்களிலிருந்து விடுதலையாகி தலை நிமிரும். காத்திரு தமிழகமே!''  என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.