Skip to main content

“முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்வது சரிதான்” - மதுரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு!

Published on 08/06/2025 | Edited on 08/06/2025
Union Minister Amit Shah says in Madurai CM MK Stalin is right

தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் மாநில மையக் குழுக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். இதில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டர். இதனையடுத்து அக்கட்சியின் மாவட்ட, மண்டல மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு இந்தியாவின் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழில் நான் பேச முடியாததற்குத் தமிழ்நாட்டு பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மதுரையின் சொக்கநாதர், கள்ளழகர் மற்றும் முருகனையும் வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன். ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருகன் மாநாட்டை இந்த மண்ணில் சிறப்பாக நடத்த வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்படும். நான் டெல்லியில் தான் வசிக்கிறேன். இருப்பினும் என் காதுகள் எப்போதும் தமிழ்நாட்டின் மீதுதான் இருக்கும். 

அமித்ஷாவால் திமுகவைத் தோற்கடிக்க முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அவர் சொல்வது சரிதான். நான் அதனைச் செய்ய முடியாது தான். ஆனால் தமிழக மக்கள் உங்களை (திமுக) தோற்கடிப்பார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் பாடங்களைத் தமிழ் மொழியில் விரைவில் கற்பிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையைத் தமிழக அரசிடம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்ததன் மூலம் பிரதமர் மோடி தமிழ்நாட்டை மதித்தார். அதற்காக நன்றி தெரிவிக்கப் பிரதமருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆபரேஷன் சிந்தூருக்கு, தமிழ்நாட்டில் இருந்து மிகப் பெரிய ஆதரவு குரல் ஒலித்தது. பஹல்காமில் மக்களைக் கொன்றவர்களை முப்படையின் உதவியோடு பிரதமர் மோடி அழித்தார். பிரதமர் மோடியின் ஆட்சியில் எல்லா துறைகள் போல, ராணுவத்திலும் தற்சார்பு பொருளாதாரம் (ஆத்ம நிர்பர்) மூலம் தன்னிறைவு அடைந்துள்ளோம். 2024ஆம் ஆண்டு பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மகாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2025இல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லியைப் போல 2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்” எனப் பேசினார்.

சார்ந்த செய்திகள்