Skip to main content

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு மிகவும் ஆபத்தானது! ராமதாஸ்

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

 

வேளாண் திட்டங்கள், வருமானவரி குறைப்புக்கு வரவேற்பு அளிப்பதாக இருப்பதாகவும், தனியார்மயம் கைவிடப்பட வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2020&21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

அதில், ''நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள 2020&21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வேளாண் வருமானத்தை பெருக்க 16 அம்ச திட்டம் அறிவிக்கப் பட்டிருப்பதும், நிபந்தனைகளுடன் வருமானவரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கின்றன. வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கம் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

 

pmk



இந்தியாவை 5 லட்சம் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டுமானால், அதற்கு வேளாண் துறை வளர்ச்சி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, அத்துறையின் வளர்ச்சிக்காக ஏராளமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீன் வளம், பால்வளம் ஆகியவற்றை பெருக்குதல், மாநில அரசுகளின்  உதவியுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தோட்டக்கலைப் பொருட்களின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்  என்பன உள்ளிட்ட மத்திய அரசின் 16 அம்சத் திட்டம் வேளாண் வருமானத்தைப் பெருக்க உழவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வேளாண்மை மற்றும் அவை சார்ந்த துறைகள், பாசனம் ,  ஊரக வளர்ச்சி ஆகியவற்றுக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 2.83 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இவற்றில் விவசாயம், பாசனம் ஆகிய துறைகளுக்கான ஒதுக்கீடு 1.51 லட்சம் கோடியில் இருந்து 1.60 லட்சம் கோரியாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.40 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.23 கோடியாக குறைக்கப்பட்டிருப்பது  ஏமாற்றமளிக்கிறது. குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு   தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படாதது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை கடுமையாக பாதிக்கக்கூடும்.
 

கல்விக்கான ஒதுக்கீடு ரூ.99,300 கோடியாகவும், சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.69,000 கோடியாகவும் உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை & பெங்களூர்  அதிவிரைவுச் சாலை அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, 27,000 கி.மீ நீளத்திற்கு தொடர்வண்டிப் பாதைகள் மின்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்கள்& குழந்தைகள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். முதலீட்டை ஈர்க்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்புகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு புதிய தளவாடக் கொள்கை, ரூ.5 கோடி வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு தணிக்கைத் தேவையில்லை என்று  அறிவிக்கப்பட்டிருப்பது, உட்கட்டமைப்பு வசதிகளை 5 ஆண்டுகளில்  ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற அறிவிப்பு ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புப் பெருக்கத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.


 

நேரடி வரிகளைப் பொறுத்தவரை வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை இந்த ஆண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அதேநேரத்தில் புதிய வருமானவரி விதிப்பு முறையின்படி வருமானவரி படிநிலைகளின் அளவு மூன்றிலிருந்து 6-ஆக அதிகரிக்கப் பட்டிருப்பதும், வருமானவரி விகிதங்கள் 5 முதல் 10% வரை குறைக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிப்பவை.
 

தமிழகத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்ற பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழர்களின் பண்டைய கலாச்சாரத்தை உலகம் அறிந்து கொள்ள வழிவகுக்கும். மத்திய அரசின் கடன்சுமை 4.50% குறைந்திருப்பதும் மகிழ்ச்சியளிப்பதாகும்.
 

அதேநேரத்தில் தனியார்மயமாக்கலுக்கான கதவுகள் அகலமாக திறக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. நிதி ஆயோக்கின் பரிந்துரையை ஏற்று அரசு மற்றும் பொதுத்துறை கூட்டு முயற்சியில் 2000 மருத்துவ மனைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்பது மட்டுமின்றி, மருத்துவக் கட்டணத்தை கணிசமாக உயர்த்துவதற்கு வழிவகுக்கும். உயர்கல்வித்துறையில் நேரடியாக அன்னிய முதலீட்டை அனுமதிப்பதையும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.


 

எல்.ஐ.சி. எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை பங்கு சந்தைகள் மூலம் தனியாருக்கு விற்கும் முடிவு மிகவும் ஆபத்தானது ஆகும். எல்.ஐ.சி. மூலம் மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் ஈவுத்தொகை கிடைத்து வருகிறது. பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டால் அந்தத்தொகை குறைந்து விடும். பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியாருக்கு  விற்பனை செய்வது மத்திய அரசின் வரி இல்லாத வருவாயை குறைத்து விடும். இது நல்ல விஷயமல்ல.
 

தமிழ்நாட்டு நலன் சார்ந்த விஷயங்களை எடுத்துக் கொண்டால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பாசனத் திட்டங்களை செயல்படுத்த போதுமான அளவில் நிதி ஒதுக்கப்பட வேண்டும். காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை  கட்டுப்படுத்த காலநிலை மாற்ற நெருக்கடி நிலை அறிவிக்கப்படாததும் வருத்தமளிக்கிறது. நிதிமசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.