Skip to main content

'இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்'- தொல்.திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!

Published on 21/03/2021 | Edited on 21/03/2021

 

UN INDIA GOVERNMENT VCK THOL THIRUMAVALAVAN STATEMENT

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

 

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அதற்கான நீதி வழங்கப்படாத நிலை உள்ளது. இது தொடர்பான விவாதம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான தீர்மானம் நாளை (22/03/2021) மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் படி இலங்கை அரசு இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக பிரிட்டன் உள்ளிட்ட ஆறு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் கடிதமும் எழுதியிருந்தோம். இந்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய நிலை குறித்து கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி, 1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என  கருத்து தெரிவித்திருந்தார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று இலங்கை தரப்பில் கூறியிருந்தாலும் இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த உறுதியான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

 

நாளை (22/03/2021) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுநாள் (23/03/2021) நடைபெறும் என்று தெரிகிறது. பெரும்பாலான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க உள்ள நிலையில் நிச்சயமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அரசு அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலோ அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தாலோ அது முழுக்க முழுக்க தமிழர் விரோத நிலைப்பாடாகவே கருதப்படும். எனவே, இந்திய அரசு தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இந்தத் தீர்மானம் முழுமையான தீர்வளிக்குமென்றோ இனப்படுகொலைக்கு முழுமையான நீதியை வழங்குமென்றோ கூற முடியாது என்றாலும், தொடர்ந்து இலங்கை அரசை சர்வதேசக் கண்காணிப்பில் வைத்திருக்கவும்; ஈழத்தமிழர் அமைப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுத்த கோரிக்கையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை என்பதை நோக்கி நகர்த்துவதாகவும் இது நிச்சயம் அமையும். எனவே, அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொல். திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
it dept raided the house where Thirumavalavan was staying

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களைத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமீறல்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் விசிக வேட்பாளருமான தொல். திருமாவளவன் எம்.பி. தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால் வருமான வரித்துறை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இது குறித்து திருமாவளவன் கூறுகையில், “எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அச்சுறுத்தல்” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவன் சிதம்பரத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வந்தபோது விசிக நிர்வாகி முருகானந்தம் என்பவர் வீட்டில் திருமாவளவன் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.