Skip to main content

"உதயநிதி சென்றது அரசியல்தான்..." -த.மா.கா. யுவராஜ்!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

yuvaraja tmc

 

சாத்தாங்குளத்தில் போலீசால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நேரில் சென்றார் தி.மு.க.இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இப்போது இது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. இ.பாஸ் இல்லாமல் சென்னையிலிருந்து உதயநிதி எப்படிச் சென்று வந்தார் என அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஈரோடு யுவராஜா நம்மிடம் பேசியதோடு அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், "நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், குறிப்பாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. வெளியில் செல்ல வேண்டும் என்றால், இ-பாஸ் கட்டயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் தற்போது தமிழகத்தில் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து, சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோரை, உரிய பரிசோதனைக்கு பின் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும்  ஒவ்வொரு மாவட்டங்களில், கரோனா தடுப்பு சிறப்பு மையங்களை  ஏற்படுத்தி 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறார்கள்.

 

ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களை தமிழக அரசு முடுக்கிவிட்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முறையாக தனது பெயரில் இ- பாஸ் பெறாமல் சென்னையிலிருந்து சாத்தாங்குளத்திற்குச் சென்று இறந்து போன ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டுக்குப் போய் நேரில் ஆறுதல் கூறியுள்ளார்கள். 

 

நோயின் தாக்கம் அதிகமாக பரவும் இந்தச் சூழ்நிலையில் திரு/ உதயநிதி அவர்கள் இ- பாஸ் இல்லாமலேயே எப்படி அங்குச் சென்றார்?, அவரை செக் போஸ்ட் காவலர்கள் எவ்வாறு அனுமதித்தார்கள். எத்தனையோ பேருக்கு நியாயமான காரணம் இருந்தும் மறுக்கப்படும் இ - பாஸ் இவருக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது?, மாவட்டம் விட்டு மாவட்டம் டூவீலரில் கூட முறையான இ- பாஸ் இல்லாமல் போகக் கூடாதுன்னு சட்டம் போட்டுள்ள நிலையில் அது காற்றில் பறந்த மாயம் என்ன?, அங்கு அவர்கள் சமூக இடைவெளி கூட முறையாக பின்பற்றவில்லை. 

 

சாதரணமா சென்னை மக்களை மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி பரிசோதனை நடத்தி முடிவு வரும் வரை ஒரு நாள் தனிமைப்படுத்தி (கொரண்டைன்) வைத்து சொந்த வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது ஆனால் இதையெல்லாம் உதயநிதி பின்பற்றினாரா? நோயை வைத்து, அரசியல் செய்து வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் அரசின் ஒவ்வொரு அசைவையும் குறை கூறிவருகிறார்கள். ஆனால் அவரது மகனே இவ்வாறு நடந்துகொண்டு நோய்ப்பரப்புதலுக்கு காரணமாகலாமா? உதயநிதிக்கு தனிச் சட்டமா? நோயின் தாக்கத்தை உணர்ந்து இனியாவது அரசு கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடக்குமாறு தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணிச் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ள அவரிடம் நாம், "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் ஒவ்வோரு மாவட்ட அமைச்சர்களும் தமிழகம் முழுக்க போய் வருகிறார்களே? மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவர் நேரில் சென்று சந்தித்தால் அக்குடும்பம் இழந்த உயிர்களுக்கு நீதி கேட்க மிகப் பெரிய துணை இருக்கிறது என்று ஆறுதல் அடையுமே" என்றோம். 

 

அதற்கு யுவராஜ், "முதல்வர் அமைச்சர்களோடு உதயநிதியை ஒப்பிட முடியாது. அவர்கள் அரசு மற்றும் மக்கள் பணி செய்ய செல்கிறார்கள். உதயநிதி சென்றது அரசியல் தான்... இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.