Skip to main content

இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியா?

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

தி.மு.க.வின் மூத்த முன்னோடி அன்பில் தர்மலிங்கத்தின் சிலை திறப்புவிழா. அதேநாளில் திருச்சி மாவட்ட தி.மு.க.வின் கலைஞர் மாளிகையில் அண்ணா, கலைஞர் சிலை திறப்பு, அதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா... என "முப்பெரும் விழா', கடந்த 10-ஆம் தேதி திருச்சியில் நடந்தது. அண்ணா, கலைஞர், அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்புவிழா மேடையில் வழக்கத்திற்கு மாறாக, மு.க.ஸ்டாலினுடன் உதயநிதியும் சபரீசனும் இருந்தனர்.

 

dmk



தென்னூர் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்ட மேடையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் வரிசையில், கட்சியில் எந்தப் பதவியும் இல்லாத உதயநிதிக்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. மேடையின் முன்பு முதல் வரிசையில் ஐ.டி. விங் நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தார் ஸ்டாலின் மருமகன் சபரீசன். மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அனைவருக்கும் சால்வை போர்த்திய தி.மு.க. மா.செ. கே.என்.நேரு, கீழே அமர்ந்திருந்த சபரீசனுக்கும் சால்வை போர்த்த தவறவில்லை.

 

dmk



கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ""கடந்த சட்டமன்றத் தேர்தலில் மகேஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்த நான், இந்த எம்.பி. தேர்தலில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தேன். உள்ளாட்சித் தேர்தலில் தெருத் தெருவாக பிரச்சாரம் செய்வேன். தமிழக சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் பிரச்சாரத்திற்கு தயாராக இருக்கிறேன். தி.மு.க. குடும்பக் கட்சிதான். ஆமா அன்பில் தர்மலிங்கம் தாத்தா மகேசுக்கு மட்டுமல்ல, எனக்கும் தாத்தாதான். எனது தாத்தா கலைஞர் எனக்கு மட்டுமல்ல, இப்போதிருக்கும் தி.மு.க. இளைஞர்கள் அனைவருக்கும் தாத்தாதான்''’என பேசியவர், ""இங்கே இருக்கும் திருநாவுக்கரசருக்கு ஒரு கோரிக்கை, நாங்குனேரியை தி.மு.க.வுக்கு விட்டுத்தாருங்கள், வென்று காட்டுவோம்''’என்றபோது எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரம் ஆனது.


இறுதியாகப் பேசிய மு.க.ஸ்டாலின், எட்டுவழிச் சாலையால் கிடைக்கும் மூவாயிரம் கோடி கமிஷனுக்காக கொள்கையற்ற சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நீட் தேர்வால் கடந்த ஆண்டு இரண்டுபேரை பலி கொடுத்தோம். இந்த ஆண்டு மூன்றுபேரை பலி கொடுத்திருக்கிறோம். 37 எம்.பி.க்கள் ஜெயித்து என்னசெய்யப் போகிறார்கள் எனக் கேட்கிறார்கள். நாடாளுமன்றம் கூடும்போது தெரியும் நாங்கள் என்ன செய்வோம் என்று. சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு மரணஅடியைக் கொடுத்து, எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்''’என ஆவேசமானார். நாங்குனேரி தொகுதியில் காங்கிரசுக்குப் பதில் தி.மு.க. போட்டியிட்டால், உதயநிதிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் களமிறக்கி ஜெயிக்கலாம். அதன்பின் தி.மு.க. இளைஞரணி பொறுப்பைத் தரலாம் என மேல்மட்ட பேச்சுகள் விறுவிறுப்பாகியுள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.