Two party leaders met in spot

இடைத்தோ்தல் நடக்க இருக்கும் கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் களத்தில் இருக்கிறார். பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே 16ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் நேற்று (19.03.2021) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisment

பின்னா், கூட்டணிக் கட்சியில் களம் காணும் திமுக நாகா்கோவில் வேட்பாளா் சுரேஷ்ராஜன் மனுதாக்கல் செய்வதற்கு, அவருடன் நாகா்கோவில் ஆா்.டி.ஓ அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்தார் விஜய் வசந்த். அதே நேரத்தில், நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி மனு தாக்கல் செய்வதற்காகவந்தபோது, அவருடன் பொன். ராதாகிருஷ்ணனும் ஆா்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது வெளியில் நின்றுகொண்டிருந்த விஜய் வசந்தை கவனிக்காமல் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் உட்கார்ந்திருந்தார் பொன். ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில், அரை மணி நேரம் கடந்து விஜய் வசந்த், பொன் ராதாகிருஷ்ணன் இருந்த இடத்துக்குச் சென்றதும், பொன் ராதாகிருஷ்ணன் உடனே எழுந்து இருவரும் சிரித்த முகத்துடன் கைகுலுக்கிக் கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவா் நலம் விசாரித்து, தோ்தலில் வெற்றிபெற மாறி, மாறி வாழ்த்துகளைக் கூறினார்கள். இதை அங்கு நின்றுகொண்டிருந்த அதிகாரிகள் மற்றும் இரண்டு கட்சியினரும் ஆச்சா்யத்துடன் பார்த்தனா்.

Advertisment