Skip to main content

சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் த.வெ.க.!

Published on 29/05/2025 | Edited on 29/05/2025

 

Tvk preparing for assembly elections

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த மாதம் (26 மற்றும் 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றியிருந்தார். அதில், “நம்மிடம் நேர்மை இருக்கிறது. கறைபடியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. உழைப்பதற்குத் தெம்பு இருக்கிறது. பேசுவதற்கு உண்மை இருக்கிறது. செயல்படுவதற்குத் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்பு குணம் இருக்கிறது. களம் தயாராக இருக்கிறது. இதற்கு மேல் என்ன இருக்கிறது?. போய் கலக்குங்கள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று பேசியிருந்தார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் வரும் ஜூலை மாதத்தில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார். இதற்கான தயாரிக்கும் பணிகளும்  முடிவடைந்துள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளைக் கட்சியினுடைய பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளவர்களிடம் என். ஆனந்த்தே நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அவர்களிடம் கட்சியில் இணைவதற்காக முன்பாக விஜய் மக்கள் இயக்கத்தில் அவர்கள் செய்த பணிகள் குறிக்கும், அதே போன்று கட்சியில் இணைந்த பின்னர் அவர்கள் செய்த பணிகள் குறித்தும் முழுமையான விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அவர்களுக்குத் தொகுதிகளில் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு குறித்தும், பொருளாதார நிலை குறித்தும் ஒவ்வொரு தொகுதியிலும் 3 வேட்பாளர்களை தற்போது தேர்வு செய்து அவர்களிடம் பேசி வருகிறார். அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியலை விஜய்யிடம் அவர் சமர்ப்பிக்க உள்ளதாகவும். அதன் பின்னர் விஜய் தலைமையில் இறுதி வேட்பாளர்கள் தேர்வு செய்ய  ஒரு குழு அமைக்கப்பட்டு அதில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் என வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணி  நடைபெறும் என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்