தந்தை பெரியாரின் 51வது நினைவு நாள், இன்று (24-12-24) அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் டிஜிட்டல் நூலகம் ஆய்வு மையத்தை அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது, திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், பெரியார் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்’ என்று தெரிவித்து பெரியார் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.