TVK leader Vijay congratulates the new state secretary of the Marxist Communist Party

விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று முன் தினம் (03-01-25) அன்று தொடங்கியது. 3, 4, 5 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் நாளின் போது மாநாடு மற்றும் செந்தொண்டர் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாவது நாளில், மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில் மூன்றாவது நாள், இன்று (05-01-25) புதிய நிர்வாகிகள் மற்றும் புதிய மாநிலக் குழு, மாநில செயற்குழு, புதிய மாநில செயலாளர் தேர்வு நடைபெற்றது. இதில் புதிய மாநிலச் செயலாளராக, பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். தற்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, பெ.சண்முகம் அடுத்த மாநிலச் செயலாளரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் திரு. பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.