Skip to main content

டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல் மார்க்கண்டேயன்..! 4 மாதங்களுக்கு முன்பே சொன்ன நக்கீரன்!!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

இடைத் தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதமே, தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக கட்சித் தலைமை. அந்த வகையில் விளாத்திகுளம் தொகுதிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பொறுப்பாளராகவும், கூடுதல் பொறுப்பாளராக அமைச்சர் எஸ்.பி வேலுமணி அறிவிக்கப்பட்டனர்.


அப்போது, விளாத்திகுளம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ, “மணல் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு எல்லாம் தேர்தலில் ‘சீட்’ கிடையாது என மறைமுக மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை தாக்கினார். பதிலுக்கு கடம்பூர் ராஜூ தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் என்று எதிர்வினையாற்றினார். 

 

m


  இதையடுத்து இருதரப்பையும் ஓபிஎஸ் சமாதானப்படுத்தினார். தொகுதியில் மார்க்கண்டேயனுக்கு தான் செல்வாக்கு என்பதால், அவருக்கு தான் இடைத் தேர்தலில் ‘சீட்’ என அப்போது பேசப்பட்டது.  இருந்தாலும் தனது ஆதரவாளர் சின்னப்பனுக்கு ‘சீட்’ வாங்கிக் கொடுப்பதில் முனைப்பு காட்டினார் கடம்பூர் ராஜூ. இதையறிந்த மார்க்கண்டேயன், புதூர் கூட்டத்தில் சின்னப்பனை பேசவிடாமல் தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு ரகளையில் ஈடுபட்டார்.

 

அப்போது, மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதோடு, கட்சியின் மானத்தை காற்றில் பறக்கவிட்டனர். (இதனால் தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல் மார்க்கண்டேயன் என அப்போதே நக்கீரன் இணையத்தில் எழுதியிருந்தோம்.) இந்த நிலையில், சின்னப்பனுக்கு சீட் வாங்கி கொடுத்து காரியத்தை சாதித்துவிட்டார் கடம்பூரார்.  இதனால், இன்று தனது ஆதரவாளர்கள் ஆயிரம் பேரை விளாத்திகுளத்தில் கூட்டி ஆலோசனை நடத்தினார் மார்க்கண்டேயன். 

 

m

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கட்சியின் தலைமை தவறான முடிவை எடுத்திருக்கிறது. இதனால், எனது செய்திதொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கும் சின்னப்பனுக்குமான மோதல் அல்ல இது.  எனக்கும் கடம்பூர் ராஜூவுக்கும் இடையேயான மோதல் இது. சின்னப்பன் 6 ஆயிரம் ஓட்டு வாங்கி தோற்பார். நாங்கள் 70 ஆயிரம் ஓட்டு வாங்கி ஜெயிக்கப்போறோம். இதுதான் நடக்கப் போகிறது” என்று தனது எண்ணப்பாட்டை வெளிப்படுத்தினார். 


அதேபோல், ஓபிஎஸ்ஐயும் ஒரு பிடி பிடித்தார். “ஆர்.கே.நகரில் நாங்களும் போட்டியிட்டோம், தினகரனும் போட்டியிட்டார். அங்க ஜெயிச்சது தினகரன். ஏன்னா அவர்(தினகரன்)ஆளுமை மிக்கவர். அம்மா இறந்தப்ப எங்களுக்கு பெரும் இழப்பு. அப்ப அந்த குடும்பம் (சசிகலா) அங்க இருந்துச்சு. அப்ப தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் எங்களை எல்லாம் மிஸ்கைடு பண்ணிட்டார். அதனால், நாங்களும் அவங்க மேலே (சசிகலா குடும்பம்) சேற்றை வாரி இறைச்சிருக்கோம். ஆனால், எங்களுக்கே தெரியாமல் இவரு தினகரனை ரகசியமாக சந்திச்சார். அப்பத்தான் இவர் மேலே எங்களுக்கு சந்தேகம் வந்திடுச்சு. இனிமேல் எனக்கு கட்சித் தலைமை சீட் கொடுக்க முன்வந்தாலும், அதை ஏற்கும் மனநிலையில் இல்லை” என்றும் மார்க்கண்டேயன் தனது பேட்டியின்போது குறிப்பிட்டார்.


  முன்னதாக மார்க்கண்டேயன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலரை ஓரம்கட்டி பேசினோம். “இவரு பேசுறத வச்சி பார்க்கும்போது, நிச்சயம் அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவார் என்பது நல்லா தெரியுது. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருத்தர் பேரையும் சுட்டிக்காட்டி பேசி, அவங்களுக்கு செய்த உதவிகளையும், கட்சிக்காக 20 வருடமாக உழைத்ததையும் உருக்கமாக பேசினார். 


சீட் கேட்டு ஓபிஎஸ்ஐ பார்த்தேன். அவரு இபிஎஸ்ஐ பார்க்க சொன்னார். இபிஎஸ்யும் பார்த்தேன். அவரு கடம்பூர் ராஜூ ராஜினாமா பண்ணிடுவேன்னு மிரட்டுறார். அதனால் தான் சின்னப்பனுக்கு சீட் கொடுத்தேன் என்கிறார். டிடிவி தரப்பை பலமுறை நான் விமர்சித்து பேசி இருக்கிறேன். அதை இப்போது வாபஸ் வாங்கிக்கிறேன் என்றார். மேலும் அதிமுக-அமமுக விரைவில் ஒன்று சேரும் என்றார். எனவே, தினகரன் அணி சார்பில் மார்க்கண்டேயன் களம் இறங்குவது உறுதி” என்றார் அந்த நிர்வாகி.

 

ஆக.. அதிமுகவில் கலகம் பிறந்துவிட்டது.  இது விளாத்திகுளம் இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு மட்டுமல்ல, தூத்துக்குடியில் களம் இறங்கும் தமிழிசை(?)க்கும் சிக்கலை ஏற்படுத்தும்.!


 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

Next Story

“ஓ.பி.எஸ்-ஐயும், தினகரனையும் பாஜக மிரட்டி போட்டியிட வைத்துள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,  திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அதுதான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டுப் போட்ட பா.ம.க. இப்போது பா.ஜ.க.வுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மருத்துவர் அய்யா ராமதாசு நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அடுத்து, தேனி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன். இதே பா.ஜ.க.வைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? “பா.ஜ.க. கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?” என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். 'டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க.” என்று சொன்னவர்தான் இந்தத் தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா? நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள்.

“மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து மெஷின் இது. அந்தக் கட்சியில் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 இலட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா? ஏன் இவர் பா.ஜ.க.வுக்குச் சென்றார் என்று.

mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

அதுமட்டுமல்ல, அம்மையார் மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? அம்மையார் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும். தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த, அவரை மிரட்டி இராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள். இப்படி, பா.ஜ.க.வின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பா.ஜ.க.வுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அ.தி.மு.க.வைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கிறது பா.ஜ.க.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்” என்று கூறினார்.