நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. அதிமுகவின் வாக்குகளை அதிக அளவில் தினகரன் பிரிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 6 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார். மேலும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தார். தினகரன் கட்சியில் முக்கிய புள்ளிகளாக இருந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தனர். மேலும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் தினகரன் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். இந்த நிலையில் கட்சியை வலுப்படுத்த தினகரன் புது ஆலோசனையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது. கட்சியின் முக்கியப் பதவிகள் மற்றும் பொறுப்புகளை இளைஞர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். மேலும் வெற்றிவேல், பழனியப்பன், புகழேந்தி மற்றும் ஒரு சில முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க உள்ளாராம். இதனால் கட்சியை இளைஞர்களை வைத்து வளர்க்க திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.