நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடத்தப்பட்டது. மேலும் கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று தினகரன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் அமமுக கட்சியின் பெற்ற வாக்குகளை வைத்து கணக்கு போட்டுள்ளனர். அதில் தினகரனின் அமமுக கட்சி எந்தெந்த தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதோ அந்த தொகுதிகள் மீது வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு கூறியதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களையும், தஞ்சை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்களையும் கணக்க்கில் எடுத்துள்ளனர். இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் கூறியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.