Skip to main content

பயணச் செலவுக்குக்கூட பணமில்லாமல் தவிப்பு!!! தமிழர்களை மீட்க விரைந்து செயல்பட வேண்டும்: டி.டி.வி.தினகரன்

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
T. T. V. Dhinakaran



வெளிநாடுகளில் மட்டுமின்றி அந்தமான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கூலி வேலைகளுக்குச் சென்ற தமிழர்களும் சொல்ல முடியாத துயரங்களோடு அங்கே தவித்து வருகின்றனர். மேலும் அவர்களில் பலர் ஊருக்கு திரும்புவதற்கான பயணச்செலவுக்குக் கூட பணமில்லாமல் தவிப்பதால் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க சிறப்புக்குழுவினர் விரைந்து செயல்பட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பல்வேறு பணிகளுக்காக குவைத், மாலத்தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்ற நூற்றுக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் கரோனா ஊரடங்கால் ஆங்காங்கே சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. விசா காலம் முடிந்து, பொது மன்னிப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், பெருந்தொற்று நோய் பாதிப்பால் வேலையிழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் சரியான உணவு, இருப்பிட வசதிகள் இன்றி குவைத்தில் தவித்து வருகின்றனர்.

 

 


ஒரே இடத்தில் பலரையும் அடைத்து வைத்திருப்பதால் கரோனா தாக்குதலுக்கு ஆளாகிவிடுவோமா என்ற பயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று மாலத்தீவுகளில் சிக்கிய தமிழக தொழிலாளர்களை அழைத்து வரும் முயற்சி, பழனிசாமி அரசின் பாராமுகத்தால் பாதியிலேயே நின்றுவிட்டதாக வரும் செய்தியும் வருத்தமளிக்கிறது.

 


வெளிநாடுகளில் மட்டுமின்றி அந்தமான், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் கூலி வேலைகளுக்கு சென்ற தமிழர்களும் சொல்ல முடியாத துயரங்களோடு அங்கே தவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் தமிழகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். மற்ற மாநில நிர்வாகங்கள், தங்கள் மக்களை அழைத்துவர செய்யும் நடவடிக்கைகளை பார்த்த பிறகாவது நமது மாநில அரசும் அப்படி செயல்பட்டிருக்க வேண்டாமா? எனவே, இனியும் தாமதிக்காமல் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு விரைந்து செயல்பட்டு, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வருவதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

மேலும் அவர்களில் பலர் ஊருக்கு திரும்புவதற்கான பயணச்செலவுக்குக் கூட பணமில்லாமல் தவிப்பதால் தமிழக அரசே அதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும். போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை செய்யும்வரை உணவு, தங்குமிடம், மருத்துவம் ஆகிய அவசர உதவிகள் தமிழக தொழிலாளர்களுக்கு கிடைக்கவும் உரிய நடவடிக் கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார். 

Next Story

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Property details of Trichy parliamentary constituency candidates

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்களைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ:
 
திருச்சி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவுக்கு ரூ. 35.90 கோடிக்கு சொத்து உள்ளதாக அவரது வேட்பு மனுவுடன் இணைத்துள்ள ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ரூ. 2,05,000, அவரது மனைவி கீதா ரூ. 5,02,000, மகன் வருண் ரூ. 2,500, மகள் வானதி ரேணு ரூ. 2,000. மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் அசையும் சொத்தாக ரூ. 2,18,94,789, அசையா சொத்துக்கள் ரூ. 33,71,89,498 என மொத்தம் ரூ.35,90,84,287(35.90 கோடி)உள்ளது. மேலும் ஒரு கார் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கடன் ரூ.1,35,65,000 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். (2.07 கிலோ தங்க நகைகள், 6.38 வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் உள்பட ரூ.1.35 கோடி கடன்). துரை வைகோ மீது எந்த வழக்கும் இல்லை.

அ.தி.மு.க. வேட்பாளர் ப. கருப்பையா:

அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா, அவரது மனைவி விமலா, மகன் குருநாத் பன்னீர்செல்வம், மகள் மகிபாலாநானி ஆகியோரது பெயர்களில் அசையும் சொத்துகள் ரூ. 2,52,08,542 மற்றும் அசையா சொத்தாக ரூ. 30,75,000 என மொத்தம் ரூ. 2,82,83,542 ( 2.82 கோடி) உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரிடம் 3 கார்கள், 5 டிப்பர் லாரிகள் உள்ளன. 506 கிராம் தங்க நகைகள் உள்ளன. ரூ.3.07 கோடி கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கருப்பையா பெயரில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

அ.ம.மு.க. வேட்பாளர் ப. செந்தில்நாதன்:

அ.ம.மு.க. வேட்பாளர் ப. செந்தில்நாதன், அவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோர் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.88,31,187 அசையா சொத்துகள் ரூ.7.30 கோடி என மொத்தம் ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களிடம் 1.100 கிலோ தங்கம் உள்ளது. ரூ.64.08 லட்சம் கடன் உள்ளது. 2 கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது திருச்சி கோட்டை, தில்லை நகர் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.