Skip to main content

அறிவிப்பு வெளியிட்ட டிடிவி.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் அமைச்சர்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

TTV contest kovilpatti against admk minister kadambur raju

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தனது கூட்டணிகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் முடித்துவிட்டது. மேலும், வேட்பாளர்கள் பட்டியலையும் சில பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதலில் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக அறிவித்தது. அதன்பிறகு, நேற்று 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. மேலும், நேற்று கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களையும் அதிமுக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அதிமுகவினர் பல இடங்களில் தங்கள் தொகுதிகளில் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று போராட்டங்களை நடத்திவருகின்றனர். 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவிலிருந்து சென்னை வந்த சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று அவர் தங்கியிருக்கும் தி.நகர் இல்லத்தில் அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்துவிட்டு விரைவில் தொண்டர்களைச் சந்திப்பேன் என்றார். ஆனால், சில நாட்கள் கழித்து திடீரென அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். அதேபோல் அதிமுகவை கைப்பற்றுவோம் எனக் கூறிவரும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நேற்று 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இன்று 50 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். 

 

முதல் கட்ட வேட்பாளரின் அமமுகவினர் எதிர்பார்த்துக் காத்திருந்த டிடிவியின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், இன்று வெளியான 50 பேர் கொண்ட பட்டியலில் டிடிவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே தொகுதியில் அதிமுகவின் சிட்டிங் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுவார் என நேற்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிமுகவை கைப்பற்றியே தீருவோம் எனச் சொல்லிவரும் டிடிவி அக்கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான கடம்பூர் ராஜுவை எதிர்த்துப் போட்டியிடுவது அத்தொகுதியில் தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்திருக்கிறது. 

 

TTV contest kovilpatti against admk minister kadambur raju

 

ஏற்கனவே, அதிமுக அமைச்சர்கள் எந்தெந்த தொகுதிகளில் நிற்கிறார்களோ, அதே தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்தி அமைச்சர்களின் டெப்பாசிட்டை காலி செய்வோம் எனத் திமுகவினர் சொல்லிவருகின்றனர். ஒருபுறம் திமுக, மறுபுறம் டிடிவி என இரண்டு பக்கமும் நெருக்கடிகள் இருப்பதனால், ஒருவித பதட்டத்தில் கடம்பூர் ராஜூ இருக்கிறார் என, அதிமுகவினர் சிலர் கூறுகின்றனர்.  இந்நிலையில், டிடிவியின் இந்த அறிவிப்பு கடம்பூர் ராஜூவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதா என அக்கட்சியினரிடம் விசாரித்தபோது, "வாக்குப்பதிவுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. நாங்களே எப்படி விளம்பரம் செய்யறதுனு யோசிச்சுட்டு இருந்தோம். இப்போ எங்க அண்ணன எதிர்த்து டிடிவி நின்னு எங்களுக்குச் செலவே இல்லாம விளம்பரத்தைக் கொடுத்துவிட்டார்" என்கின்றனர். 

 

இதுகுறித்து அமமுகவினர் சிலரிடம் கேட்டபோது, "விளம்பரமும் வெற்றியும் யாருக்குக் கிடைக்குதுனு பொறுத்திருந்து பாருங்க. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதுதான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர் எங்கள் அண்ணன் டிடிவி" என்கின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.