ADVERTISEMENT

காங். MP, MLAக்களுடன் ஆலோசனை செய்கிறார் தினேஷ் குண்டு ராவ்!

04:18 PM Sep 23, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாளை (24.09.2020) சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் உள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய தொடர் போராட்டங்களை பல கட்டங்களாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. நாளை (24.09.2020) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் அவர்கள் நாளை (24.09.20) காலை 9.30 மணியளவில் சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வருகை புரிகிறார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி காங்கிரஸ் கட்சியினரைச் சந்திக்கிறார்.

மாலை 3 மணிக்கு தமிழக காங்கிரசின் முன்னணி அமைப்புகள் மற்றும் இதர துறைகள் சார்ந்த தலைவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்கள், சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

மேலும் செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

மாலை 3.30 மணியளவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக் குறியாகியிருக்கிறது. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுகிற உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் விளைபொருளை நியாயமான விலையில் சந்தையில் விற்பதற்கான ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் அடித்தளம் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக விவசாயிகள் பெற்றுவந்த உரிமைகள் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் நலனைக் காப்பாற்றுகிற வகையில் மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்துப் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள விவசாயிகள் ஆதரவு போராட்டத்திற்கான செயல் திட்டங்களை வகுப்பதற்காகவும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காகவும் தினேஷ் குண்டு ராவ் அவர்களது வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே, திரு தினேஷ் குண்டு ராவ் அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் வருகை புரிந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT